தமிழ்நாட்டில் தியேட்டர் உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால், கேளிக்கை வரி விதிப்பை எதிர்க்கிறோம் என்று சொல்லி அவர்கள் தியேட்டர்களை மூடி ஸ்டிரைக் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை 200 ரூபாயாக நிர்ணயிக்க அரசிடம் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் 120 ரூபாய் கட்டணங்கள் 153 ரூபாய் வரை உயரும் என்று சொன்னார்கள். அதற்கே மக்கள் தியேட்டர் பக்கம் வர மாட்டார்கள் என்று தியேட்டர்காரர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அவர்கள் 200 ரூபாய் ஆக டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்தால் மக்கள் எப்படி தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்று எண்ணுகிறார்கள்.
உண்மையில் கேளிக்கை வரியை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்களா அல்லது டிக்கெட் கட்டணத்தை உயர்த்தப் போராடுகிறார்களா என்பது தெரியவில்லை.
தியேட்டர்கள் தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளதன் மூலம் சுமார் 25 கோடி ரூபாய் வரையில் ஒரு நாளைக்கு நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் இரண்டு நாட்களாக வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சனைக்கு சீக்கிரமே தீர்வு காணப்படுமா அல்லது மேலும் சில நாட்கள் ஆகுமா என்பது விரைவில் தெரிய வரும்.