‘தீரன் அதிகாரம் ஒன்று’ வழக்கமான போலீஸ் படம் அல்ல – கார்த்தி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ரகுல் ப்ரீத் சிங், இயக்குநர் H.வினோத் , இசையமைப்பாளர் ஜிப்ரான், கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கார்த்தி பேசும் போது,

‘தீரன் அதிகாரம் ஒன்று’ வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்துக்கு பின் இந்த படத்தின் படபிடிப்புக்காக ராஜஸ்தான், ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்குப் படஙபபிடிப்புக்காக சென்றோம். அங்கே கடுமையான வெயில் மற்றும் குளிரை தாங்கிக் கொண்டு படபிடிப்பை நடத்தினோம்.

இந்த படத்தின் கதை நான் ‘சிறுத்தை’ படத்துக்காக படபிடிப்பில் இருந்த போதே என்னைத் தேடி வந்தது. அப்போது வந்த அதே கதை மீண்டும் என்னிடம் வந்தது. நம்மைச் சுற்றியே இந்த கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று நான் யோசித்து இந்த கதையில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன்.

நாம் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே வரும் யாரும் நம்முடைய கண்ணைப் பார்க்க மாட்டார்கள். அதையெல்லாம் தாண்டி ஒருவர் நம்முடைய கண்ணை பார்ப்பார். அவரிடம் சென்று பேசினால் அவர் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை நம்மிடம் சொல்லுவார் என்று என்னிடம் ‘மாற்று உலகத்தை’ பற்றி அதிகம் படித்த என்னுடைய நண்பன் கூறுவார். அதே போல் தான் இந்த படத்தின் கதை என்னை சுற்றியே வந்து கொண்டே இருந்தது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ரசிக்கும் வகையில் இந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும். இந்த படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும் போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல் , காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு குத்து பாடல் , காரை வேகமாக ஒட்டி செல்லும் போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல் , மீண்டும் ஒரு அழகான மெலடி என்று மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை நமக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்த படத்தில் தந்துள்ளேன். நான் இயக்குநரின் நடிகராகத்தான் இருந்துள்ளேன். இந்தப் படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்,” என்றார் கார்த்தி.

நிகழ்ச்சியில் இயக்குநர் வினோத் பேசியதாவது,

“போலீஸ் என்றாலே தவறானவர்கள் தான் என்ற பிம்பம் மக்கள் மனதில் உள்ளது. அதற்குக் காரணம் வாட்ஸ்ஆப்பில் வரும் போலீஸ் வீடியோக்கள் தான். அந்தத் தவறான பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

எப்படி சினிமாவில், அரசியலில், பத்திரிகையாளர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்களோ அதே போல் தான் காவல் துறையிலும் நல்லவர்கள். கெட்டவர்கள் என்று இருக்கிறார்கள். நிஜமான போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அதேபோல் தான் இந்தப் படத்திலும் இருப்பார்கள்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ கமர்ஷியல் படம். எல்லோருக்கும் இப்படம் ஒரு பாடம் போல் இருக்கும். ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படம். படத்தில் தீரன் திருமாறன் என்ற போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார். போலீசை சுற்றி நடக்கும் பரபரப்பான கதையாக இதை உருவாக்கியுள்ளோம். ஜிப்ரான் மிகச்சிறந்த பாடல்களை இந்த படத்துக்கு தந்துள்ளார்,” என்றார் இயக்குநர் வினோத்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ நவம்பர் மாதம் 17ம் தேதி வெளியாக உள்ளது.

Read Previous

நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ டிரைலர்

Read Next

‘கார் விவகாரம்’, ஜிஎஸ்டி-க்கு ஆதரவாக அமலா பால் அறிக்கை

Most Popular