கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வெளிவந்துள்ள ‘அறம்’ படம் விமர்சகர்கள், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு அற்புதமான கதையைப் படமாக்கிய இயக்குனர் கோபி நயினாரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
கோபி நயினார் எழுதிய ‘கருப்பர் நகரம்’ கதைதான் பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ படமாக வெளிவந்தது என்ற சர்ச்சை இன்னமும் இருந்து வருகிறது. அதன் பின் விஜய் நடித்து வெளிவந்த ‘கத்தி’ படமும் கோபி நயினார் எழுதிய கதைதான் என்ற மற்றொரு சர்ச்சையும் இருக்கிறது.
இப்போது ‘அறம்’ படத்திலும் மக்கள் பிரச்சனை சார்ந்த கதை இருப்பதால் முந்தைய சர்ச்சைகள் உண்மையாகக் கூட இருக்கலாமோ என்று இப்போது ‘அறம்’ படத்தைப் பார்த்த ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
இதனிடையே, இயக்குனர் பா. ரஞ்சித் இன்று ‘அறம்’ படத்தைப் பற்றிப் பாராட்டி டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். அதில் ‘அறம்’ படத்தின் இயக்குனர் கோபி நயினார் பெயரை அவர் வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்.
#அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி…#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர்&படக்குழுவினர்க்கும் #தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்
— pa.ranjith (@beemji) November 12, 2017
ஒரு படம் என்பது இயக்குனரின் படைப்புதான் என்பது பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்களுக்குத் தெரியாதா என்ன ?. ‘கோபி நயினார்’ என்ற பெயரையும் சேர்த்துப் பாராட்டியிருந்தால் என்ன ஆகிவிடப் போகிறது.