பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் மற்றும் பலர் நடித்த படம் மான்ஸ்டர்.
மே 17ல் வெளிவந்த இந்தப் படம் சிறியவர் முதல் பெரியவர் வரை கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கு படக்குழுவினர் நன்றி தெரிவிக்க இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும் போது,
“படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன்.
பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது. படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதட்டம் இருந்தது. கோடை விடுமுறையில் வெளியாகிறது. அனைவரிடமும் பணம் இருக்குமா என்ற அளவுக்கு யோசிப்பேன். பத்திரிகையாளர்கள் காட்சியை பார்த்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது.
இந்தக் குழுவில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் தங்களுக்கு கொடுத்த பணிகளைதாண்டி பணியாற்றினார்கள். இதேபோல் தரமான படங்களை இயக்குவேன்,” என்றார்.
வசனகர்த்தா சங்கர் பேசுகையில்,
மே மாதம் வெற்றி மாதமாக இருக்கிறது. அரசியலில் எல்லோரும் நான் வெற்றி பெற்றேன் என்று கூறுகிறார்கள். நாங்களும் இப்படம் மூலம் வெற்றி அடைந்திருக்கிறோம். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நோக்கம் குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. ஏவிஎம்-ற்கு பிறகு இவர்களுக்குத்தான் அந்த நோக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். வேறு நிறுவனமும் இருக்கலாம், ஆனாலும் இவர்களை நான் நேரிடையாகப் பார்க்கிறேன். பெரிய பத்திரிகைகளில் எனது பெயர் வந்ததில் மகிழ்ச்சி.
கதை என்பது ஆத்மா. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பிரம்மாக்கள் தான். ஒரு திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமானது வசனம் என்று நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரைப்படம்தான் சரியான தேர்வு.
நல்ல வசனங்களையும், இலக்கியங்களையும் திரைப்படத்தில் கொண்டு வரவேண்டும். அதற்கு நெல்சன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்திற்கு இந்தளவு பொருத்தமாக இருப்பார் என்ற நினைக்கவில்லை. ‘ஒரு நாள் கூத்து‘ குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியிருப்பதில் மகிழ்ச்சி,” என்றார்.
கருணாகரன் பேசும் போது,
ஒரு எளிமையான படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இதுபோல தரமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நெல்சனுக்கு நன்றி. எஸ்.ஜே.சூர்யா, அவருடன் நடிப்பவர்களை கதாபாத்திரத்திற்கேற்றவாறு இயல்பாக வைத்துக் கொள்வார். பிரியாவும் நன்றாக பழகுவார்,” என்றார்.
எஸ்.ஜே.சூர்யா பேசுகையில்,
முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதைதான் நாயகன்.
அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.
இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.
பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குநரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார் இயக்குநர்.
இப்படம் மூலம் என்னை உயரத்திற்கு கொண்டு வந்ததற்கு நெல்சனுக்கும், பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸுக்கும் நன்றி. இசையும் நன்றாக உதவி புரிந்திருக்கிறது. இதே குழுவுடன் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,
ஒரு படத்தை உருவாக்குவதற்கு கதை மட்டுமே என்பதைத்தாண்டி, எந்த பிரச்னை வந்தாலும், தடையில்லாமல் வெளியாகும் வரை போராட்டம்தான். இதை இயக்குநர் நெல்சன் நன்றாக செய்திருக்கிறார். ஒரு நல்ல படம் திரையரங்கிற்கு செல்வதில் சிரமம் இருக்கும். ஆனால், முதல் கட்டமாக உதவி புரிந்தது பத்திரிகையாளர்கள்தான். முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. சிறிய படங்களுக்குத் திரையங்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.
ஆனால், இப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதேபோல் தரமான படங்களை கொடுக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி,” என்றார்.