200 கோடி ரூபாய் வசூலை கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம்.
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கேரளாவில் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியான நாள் முதலே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
’கண்மணி அன்போடு காதல்’ பாடல் உபயோகித்த விதம், குணா படத்தின் குகையில் படப்பிடிப்பு, தமிழ் நடிகர்கள் நடித்திருந்தது என தமிழக மக்களிடையே இந்தப் படம் நெருக்கமானது. இதனால் தமிழ் படங்களுக்கு நிகராக திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்தது. மேலும், வசூலில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.
தற்போது 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதல் மலையாள படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்தச் சாதனையால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.
இந்த வசூலில் தமிழகத்தில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு கிடைத்துள்ளது. மேலும், 2024-ம் ஆண்டில் இதுவரை வந்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் விரைவில் தமிழகத்தில் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.