தேர்தலில் ஜெயித்தால் திரையுலகில் இருந்து விலக முடிவு செய்துள்ளார் கங்கணா.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் கங்கணா. தீவிர பாஜக ஆதரவாளரான இவர், சமூக வலைதளத்தில் இந்தி திரையுலகினர் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தெரிவித்துள்ளார். தற்போது பாஜக சார்பில் மந்தி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் திரையுலகில் இருந்து விலகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் கங்கணா. விரைவில் ஒப்புக் கொண்ட படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக முடிவு செய்துவிட்டார்.
மேலும் திரையுலகில் இருந்து விலக முடிவு செய்து அளித்துள்ள பேட்டியில் பாலிவுட் திரையுலகினரையும் சாடியிருக்கிறார் கங்கணா. அதில் அவர் கூறியிருப்பதாவது:
”திரையுலகம் என்பது பொய், அனைத்துமே போலி. அங்கிருப்பவர்கள் மிகவும் மாறுபட்ட சூழலை உருவாக்குகிறார்கள். பார்வையாளர்களை கவரும் ஒரு போலியான பளபளப்பான உலகம் அது. இது தான் உண்மை.
நான் ஒரு உணர்ச்சிவசப்படும் நபர். ஒருபோது ஒரு வேலையை மட்டுமே செய்ய விரும்புவது இல்லை. நடிப்பில் சலிப்பு ஏற்பட்டால், இயக்குவது, தயாரிப்பது என களமிறங்கிவிடுவேன்”
இவ்வாறு கங்கணா தெரிவித்துள்ளார்.