ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கைரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.
’இந்தியன் 2’ பணிகளில் ஏற்பட்ட தடையினால், ‘கேம் சேஞ்சர்’ படத்தினை தொடங்கினார் ஷங்கர். ஆனால், தற்போது ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ என 3 படங்களின் பணிகளையும் ஒருசேர கவனித்து வருகிறார். ஒரே நேரத்தில் 3 பெரிய பட்ஜெட் படங்களில் பணிபுரிந்து வரும் ஒரே இயக்குநர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 22) முதல் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 20 நாட்கள் இந்தப் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. இத்துடன் ராம்சரண் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவு பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ராம்சரண்.