’துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து சூர்யா விலகியதற்கான காரணத்தினை கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், பார்த்திபன், ரீத்து வர்மா, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படம் பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கிறது. மேலும், எப்போது வெளியீடு என்பது இதுவரை முடிவாகவில்லை.
இதனிடையே, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் முதலில் சூர்யா நடிக்க பூஜை போடப்பட்டது. பின்பு சில நாட்களில் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
தற்போது கெளதம் மேனன் அளித்துள்ள பேட்டியில், ‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து சூர்யா விலகியதற்கான காரணத்தினை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“எனக்கு ’துருவ நட்சத்திரம்’ எந்த மாதிரியான படமாக இருக்கும் என்று சூர்யா கேட்டார். மேலும், இந்தக் கதை தொடர்பான படக்குறிப்புகள் ஏதேனும் இருக்கிறதா எனவும் கேட்டார். இந்த கதைகளத்தில் இங்கு யாருமே படம் செய்ததில்லை, புது கதைகளம், புதிய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறேன். அதை வைத்து தொடர்ச்சியாக படங்கள் பண்ண எண்ணம் என்று கூறினேன்.
Bourne சிரீயஸ் படங்கள் மாதிரி பண்ணலாம் என்றும் சொன்னேன். அவருக்கு அதில் உடன்பாடில்லை. நிறைய விவாதித்தோம், டெஸ்ட் ஷுட் கூட செய்தோம். 2-3 நாட்களில் தொடர் படப்பிடிப்பு போக வேண்டிய சூழலில், இந்தக் கதை வேண்டாம் வேறு பண்ணலாம் என்று சூர்யா கூறிவிட்டார். என்னை நம்பி வாருங்கள் என்றெல்லாம் பேசினேன். தவறாக படமாக இருக்காது, நானே தயாரிப்பாளராகவும் இருக்கிறேன் என்றெல்லாம் விவாதம் செய்தேன். அவருடைய கேரியரில் இந்தப் படம் வேண்டும் என்று தோன்றவில்லை என நினைக்கிறேன்.
’துருவ நட்சத்திரம்’ கதையை 80% தான் சூர்யாவிடம் சொன்னேன். இப்போது இந்தப் படம் பார்த்தீர்கள் என்றால் கூட படம் அப்படித்தான் முடிவடையும். படத்தின் முடிவில் நாயகனுக்கு என்னாச்சு என்பது தெரியாது. ஏனென்றால் தொடர்ச்சியாக அந்த கதாபாத்திரத்தை வைத்து படங்கள் பண்ண எண்ணம்”
இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.