செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ். லலித்குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.
இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது. படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக விக்ரம், படத்தில் நடித்துள்ள நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் பெங்களூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் வெளியீட்டிற்கு முன்னர் அப்படக் குழுவினர், ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்வதுடன், படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிவித்து, படத்தை திரையரங்குகளில் வருகை தந்து காண செய்வதற்கான 'முதல் நாள் முதல் காட்சி உத்தி'யை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி ஆகிய இடங்களுக்கு பயணித்த 'கோப்ரா' பட குழுவினர், இதன் தொடர்ச்சியாக பெங்களூரூக்கும் சென்றனர்.
பெங்களூரூவிலுள்ள நெக்ஸஸ் மால் எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான விழாவில் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். கட்டுக்கடங்காத அளவிற்கு திரண்ட ரசிகர்களிடம் விக்ரம், 'கோப்ரா' படத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். அதன் பிறகு அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
திட்டமிட்டபடி பெங்களூரூவில் ரசிகர்களை சந்தித்த 'கோப்ரா' பட குழுவினர், அடுத்த கட்டமாக ஹைதராபாத்திற்கு சென்றார்கள்.