விக்ரமை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம்.
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
200 கோடி ரூபாய் வசூலை கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல், விக்ரம், சித்தார்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதில் தனுஷ் மற்றும் விக்ரம் இருவருமே, இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் தனுஷ் மற்றும் விக்ரம் இருவரையும் 2-3 முறை சிதம்பரம் சந்தித்துள்ளார். ஆனால், தனுஷுக்கு தன்னிடம் கதை இல்லை எனவும், சரியான கதை அமைந்தவுடன் கண்டிப்பாக வருவதாக சிதம்பரம் கூறிவிட்டதாக தெரிகிறது.
ஆனால், விக்ரமுடனான பேச்சுவார்த்தையை மட்டும் சிதம்பரம் இன்னும் நிறுத்தவில்லை. இருவரும் வீட்டில் தொடர்ச்சியாக சந்தித்து கதை விவாதம் செய்து வருவதாகக் கூறுகிறார்கள். அடுத்து மலையாள படம் இயக்கவிருப்பதாக சிதம்பரம் தெரிவித்தாலும், விக்ரம் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.
மலையாள படத்தினை முடித்துவிட்டு, விக்ரம் படத்தினை இயக்கவுள்ளாரா அல்லது விக்ரம் படத்தினை முடித்துவிட்டு, மலையாள படம் இயக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும்.
ஏனென்றால், அருண்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்குப் பிறகு எந்தவொரு படத்தினையும் விக்ரம் இன்னும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.