கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பனாரஸ்’ படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கன்னட திரை உலகத்தின் தர்ஷன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
'பனாரஸ்' படத்தில் இடம்பெற்ற பாடல்களும், படத்தின் முன்னோட்டமும் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டன.
நிகழ்ச்சியில் நடிகர் தர்ஷன் பேசுகையில்,
''பனாரஸ்’ படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன். படத்தின் நாயகனும், நண்பருமான ஜையீத் எனக்கு திரையிட்டுக் காண்பித்தார். தொடக்கத்தில் ஜையீத் பணக்கார தந்தையின் மகன் என்றும், திறமை இல்லாதவர் என்றும் நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் கதை மற்றும் இயக்கம் சிறப்பாக உள்ளது. அதனால் இந்தப் படம் நிச்சயமாக மாபெரும் வெற்றியைப் பெறும்,'' என்றார்.
படத்தின் நாயகனான ஜையீத் கான் பேசுகையில்,
''இன்று என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். எனது வாழ்க்கையில் முக்கியமான இரண்டு சக்திகள் இங்கே என்னுடன் உள்ளனர். எனது மூத்த சகோதரர் மற்றும் எனது தந்தையைப் போன்ற தர்ஷன் இங்கே இருக்கிறார். தர்ஷன் தொடக்கம் முதலே எனக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்தத் தருணத்தில் என்னுடைய தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். அவரை இழிவுபடுத்தும் செயலை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன். மேலும் எனது தந்தையினால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.
'பனாரஸ்' படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம். ஒவ்வொருவரும் இந்தப் படத்தைப் பார்த்து என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.
என் கே ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் 'பனாரஸ்' திரைப்படம் நவம்பர் நான்காம் தேதி அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தமிழில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
'பனாரஸ்' படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சுஜய் சாஸ்திரி, தேவராஜ், அச்யுத் குமார், பர்க்கத் அலி, சப்னா ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.
காசியை கதைக்கள பின்னணியாக கொண்டு அமானுஷ்ய விசயங்களுடன் கூடிய காதல் கதை ‘பனாரஸ்’.