தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட்.
இந்நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள புதிய படத்தை சரோவ் சண்முகம் இயக்குகிறார்.
இப்படத்தில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் சரோவ் சண்முகம் கூறுகையில்,
நம் தமிழ் சினிமாவில் ஹாலிவுட்டுடன் ஒப்பிடும் போது குழந்தைகளை மையப்படுத்திய குடும்பப் படங்கள் மிகவும் அரிதானவை. நடிகர் சூர்யா அவர்களின் 2 டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் எப்போதும் அழகான கருத்துள்ள குடும்பப் படங்களை உலகளவிலான ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் தந்து வருகிறது. அந்த வகையில் இப்படமும் குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும். மேலும் மாஸ்டர் ஆர்னவ் விஜய் இப்படத்தில் அறிமுகமாவது மிக்க மகிழ்ச்சி. என்னைச் சுற்றிலும் நம்பிக்கை அலைகளும், நேர்மறைதன்மையும் நிரம்பி இருக்கிறது. எனவே படத்திலும் அது வெளிப்படும் என நம்புகிறேன்,” என்றார்.
2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறுகையில்,
குழந்தைகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஆர்னவ் விஜயை அறிமுகப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. ஒரு சிறுவனுக்கும் அவனது நாய்க்குட்டிக்கும் உள்ள அழகான உறவை அவர்களுக்கிடையேயான அன்பையும், உணர்வையும் வெளிப்படுத்தும் படம் இது,” என்றார்.
ஆர்.பி. பிலிம்ஸ் S.R.ரமேஷ் பாபு இணை தயாரிப்பு செய்யும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை அமரன் செய்கிறார். மற்றும் உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் மொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரும் நடிகர் கூட்டம் நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.