‘அனந்தா’ டிரைலரை வெளியிட்ட துர்கா ஸ்டாலின்

கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அனந்தா. ஜெகபதிபாபு, சுகாசினி, YG மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் அடுத்த மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது துர்கா ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும்போது,

இந்த பட விழாவிற்கு துர்கா ஸ்டாலின் அவர்கள் வந்தது பாபா அவர்களின் அருள். 12 வருடங்களுக்கு முன்னால் பா. விஜய் அவர்கள் எனக்கு போன் செய்து கலைஞர் அவர்களைப் பற்றி கேட்டார். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன். உடனடியாக கலைஞர் அவர்களிடம் போனை கொடுத்து பேச சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கலைஞர் அவர்கள் கோபாலபுரம் வர முடியுமா என்று கேட்டார், உடனடியாக அங்கு சென்றேன். முதல் முறையாக அவரை அங்கு சந்தித்தேன். பாட்ஷா படம் பார்த்து மிகவும் ரசித்துள்ளேன் என்று சொன்னார்கள். பாட்ஷா படத்தின் ஸ்கிரீன் பிளே, ரஜினிகாந்த் அவர்களின் ஆக்டிங் போன்றவற்றை பற்றி பேசினார்கள். அடுத்த ஆறு மாதம் அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயக்குனர்களுக்கு வேண்டிய மரியாதையை கொடுப்பவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். என்னுடைய சங்கமம் படத்தை பார்த்துவிட்டு மு க ஸ்டாலின் அவர்கள் என்னை வெகுவாக பாராட்டினார்கள். துர்கா ஸ்டாலின் அவர்கள் இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

 
இந்த படத்தின் தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி திடீரென என்னை தொடர்பு கொண்டு பாபா அவர்களை பற்றி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். பாட்ஷா, அண்ணாமலை போன்று இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2009 ஆம் ஆண்டு பாபா அவர்களை முதல் முறையாக சந்தித்தபோது, இவ்வளவு நாள எங்கிருந்தாய் ஏன் வரவில்லை என்று கேட்டார்கள். அப்போது எனக்கு புரியவில்லை, ஆனால் இன்று அதன் அர்த்தம் எனக்கு புரிகிறது. அனந்தா படத்திற்கு ஒரு தனி எனர்ஜி உள்ளது. ஒவ்வொரு நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தேவா அவர்கள் பிரமாதமான இசையை கொடுத்துள்ளார். பா. விஜய் அவர்கள் சிறப்பாக வசனங்கள் எழுதியுள்ளார். இந்த படம் முழுவதும் ஒரு அதிசயம் அனைவருக்கும் நடந்தது. ரத்னாகர் அவர்கள் இந்த படத்தை பார்த்து என்ன சொல்கிறார் என்பதை கேட்க ஆவலுடன் இருந்தேன். அவர் இல்லாமல் இந்த படம் தயாராகி இருக்காது. படத்தைப் பார்த்துவிட்டு பியூட்டிஃபுல் பிலிம் என்று சொன்னார்கள்.

ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகும். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். லாபத்திற்காக இந்த படத்தை எடுக்காமல் பாபா அவர்களின் மீது உள்ள அன்பினால் இந்த படத்தை எடுத்துள்ளார் தயாரிப்பாளர் கிரிஷ். எனது ஆருயிர் நண்பர் YG மகேந்திரன் அவர்கள் இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நன்றி

மல்லிகா ஸ்ரீனிவாசன் பேசும்போது,

பாபா அவர்களின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட உள்ளோம். இதற்காக உலகம் முழுவதிலிருந்தும் அவருடைய பக்தர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த மனித குலத்திற்காக பாபா அவர்கள் நிறைய நல்லது செய்து இருக்கிறார்கள். அனந்தா படத்தின் டிரைலரை பார்க்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. எங்களது அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வந்ததற்கு துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிரிஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவருடைய முழு ஆன்மாவையும் இந்த படத்திற்காக அர்ப்பணித்துள்ளார். அனந்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டுள்ளேன். நன்றி.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் படக்குழுவினரின் முன்னிலையில் அனந்தா படத்தின் டிரைலரை துர்கா ஸ்டாலின்  வெளியிட்டார்கள். 

Read Previous

பல்ஸ் – இசை வெளியீட்டு விழா

Read Next

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – நலன் காக்கும் அணி அறிமுகக் கூட்டம்