பரம்வா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்க, கிரண்ராஜ் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிரிங்கேரி, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் '777 சார்லி'
'சார்லி' என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி.
'அவனே ஸ்ரீமன்நாராயணா' என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த ரக்ஷித், இப்படத்தைத் தயாரித்து தர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கன்னடத்தில் தயாராகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஜுன் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சக்தி பிலிம்ஸ், சக்தி வேலன் பேசுகையில்,
கார்த்திக் சுப்ராஜ் இந்தப் படத்தை எனக்கு போட்டு காட்டி, இதை வெளியிட வேண்டும் என்றார். இந்த படத்தில் நடித்த நாய்க்கு சிறந்த விலங்கு நடிகருக்கான விருது வழங்க வேண்டும். இந்த படத்தில் ஹீரோவுக்கும், நாய்க்குமான உறவை எப்படி வெளிக்கொண்டு வந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, பிரமிப்பாக இருக்கிறது. குழந்தைகளுக்கும், செல்லபிராணி வளர்ப்பவர்களுக்கும் இந்த படம் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
ராஜ் பி ஷெட்டி பேசுகையில்,
இந்தப் படத்தில் கால்நடை மருத்துவராக நடித்துள்ளேன். இந்தப் படத்தை சிறப்பாக எடுக்க முயற்சிக்கும் குழுவில் ஒரு ஆளாக இருக்க விரும்பினேன். நான் கூட இந்தப் படம் எடுக்க முன்வர மாட்டேன். இந்தப் படம் அத்தனை கடினமானது. நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும். இயக்குனர் கிரண்ராஜ், ரக்ஷித் ஷெட்டி ஆகியோருக்கு நன்றி. படத்தை வெளியிடும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி.
ஸ்டோன் பெஞ்ச் கார்த்திகேயன் பேசுகையில்,
இந்தப் படத்தை எங்களுக்கு போட்டு காட்டிய போது பிரமித்து போனோம். நானும், கார்த்திக் சுப்புராஜும் படத்தை பார்த்துவிட்டு எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை என்று பேசிக் கொண்டோம். திரைப்படங்கள் மீது பெரிய காதல் இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும். நாங்கள் இந்தப் படத்தை பார்த்தவுடன் வெளியிட விரும்பினோம். எங்களுக்கும் இந்தப் படம் பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. ரக்ஷித் ஷெட்டி, இயக்குனர் கிரணுக்கு வாழ்த்துகள். ஒரு நாயை இப்படி நடிக்க வைத்தது பெரிய சவாலான விஷயம். சார்லி உடைய நடிப்பு அபாரமாக இருக்கிறது. டப்பிங் பணிகளை பார்த்து கொண்ட டப்பிங் குழு இதை ஒரு நேரடி தமிழ் படம் போல் உருவாக்கியுள்ளனர். எஸ் ஜே சூர்யா சாருக்கு நன்றி கூறிகொள்கிறேன்.
நடிகை சங்கீதா பேசுகையில்,
செல்லப்பிராணி நாய் உடன் பணிபுரியும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமைபடுகிறேன். இயக்குனர், தயாரிப்பாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். நீங்கள் படம் பார்த்து ஆதரவு தர வேண்டும்.
இயக்குனர் கிரண்ராஜ் பேசுகையில்,
நான் செல்லபிராணி விரும்பி, அதனால் தான் இந்தக் கதையை தேர்ந்தெடுத்தேன். இந்தப் படத்தில் சவால்கள் நிறைய இருக்கும் எனத் தெரியும், இருந்தாலும் பரவாயில்லை என்று தான் இந்தப் படத்தைத் துவங்கினோம். ரக்ஷித் ஷெட்டி கதையைக் கேட்டு, நாம் கண்டிப்பாக இந்த படத்தை செய்வோம் என கூறினார். பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் கதையை உருவாக்கு என ரக்ஷித் ஊக்கமளித்தார். நடிகர்கள் ரக்ஷித், ராஜ், சங்கீதா என பலரும் 3 வருடங்களை இந்த படத்துக்காகக் கொடுத்துள்ளனர். கன்னடம் போல் மற்ற மொழிகளிலும் திறமையான ஆட்களிடம் இந்தப் படத்தைக் கொடுக்க வேண்டும் என விரும்பினோம். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட முன் வந்தார். அது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. டப்பிங் என்று வரும் போது, தமிழ் டப்பிங் குழு மிகத் திறமையானவர்கள், தமிழ் டப்பிங் கலைஞர் சேகர், ஹீரோவை விட சிறப்பாகப் பேசியுள்ளார். இந்தக் கதையில் எனக்கு இருந்த தெளிவு, தயாரிப்பாளருக்கும் இருந்தது. இந்தப் படத்தை நீங்கள் தமிழில் பார்த்தால், இதை டப்பிங் படம் என்று கூறமாட்டீர்கள், நேரடி தமிழ்ப் படம் என்று கூறுவீர்கள். இந்தப் படத்தில் நடித்த நாயை(சார்லி) தேர்ந்தெடுக்க நாங்கள் பல இடங்களில் தேடிகொண்டிருந்தோம். பின்னர் பல நாள் கழித்து இந்த நாயைக் கண்டுபிடித்தோம். நீங்கள் படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,
கொரோனாவிற்கு பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட துறையுடன் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். ரக்ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிட காட்சியைப் பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். இந்தப் படம் ஒரு பெரிய உணர்வை எனக்கு கொடுத்தது. நான் இந்தப் படத்தைத் தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்தப் படத்தின் வெற்றி மீது மிக உறுதியாய் இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியைக் கொடுத்த படம். இயக்குனர் கிரண்ராஜுக்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம். இறைவி படத்தில் நாய் காட்சி எடுக்கமுடியாமல் தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. இந்த படத்தின் கதை நிச்சயமாக சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. இந்தஙப படம் பார்த்த பின்னர் வாழ்க்கை மேல் ஒரு நம்பிக்கை வரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. உங்களுடைய ஆதரவு எங்களுக்குத் தேவை. படம் பார்த்துவிட்டு கூறுங்கள்.
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில்,
நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு நன்றி. இப்படத்தை விட படத்தில் பணியாற்றிய நாய், படக்குழு மற்றும் இயக்குனருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இயக்குனருடய ஆர்வம்தான் இந்தப் படத்தை அவரை எடுக்க வைத்திருக்கிறது. படம் சிறிய பட்ஜெட் என நினைத்தேன், ஆனால் இந்தியாவின் பல இடங்களில் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இந்த நாய் (சார்லி) ஒரு பெரிய நடிகனாய் நடித்துள்ளான். படத்தின் காட்சிகளில் அது கொடுத்த உணர்வுகள் அபாரமாக உள்ளது. 777 சார்லி ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட படம். ஸ்டோன் பெஞ்ச் மூலமாக இந்தப் படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் நல்ல படங்களை தவறவிடமாட்டார்கள். இந்தப் படம் தமிழுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ரக்ஷித் சாருடைய அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்.
நடிகர் ரக்ஷித் ஷெட்டி பேசுகையில்,
இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பான படைப்பு . சார்லி 777 என் வாழ்கையில் பல விஷயங்களை மாற்றியது. ஒன்றரை வருடத்திற்கு முன்னரே படம் முடிந்துவிட்டது. நான் இந்தப் படத்தை தயாரித்துள்ளேன், அதனால் எனக்கு படம் ஒடிடிக்கு அனுப்பலாமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நான் படத்தை முழுமையாக பார்த்தபிறகு, என்ன நடந்தாலும் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தைப் பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் விலை மதிப்பற்றது. எல்லா படங்களும் பான் இந்தியா படங்கள் இல்லை என எங்களுக்குத் தெரியும். ஆனால் பான் இந்தியா படமாக மாற முழு அம்சமும் இந்தப் படத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்த படத்தில் முதலில் இணைந்த நிறுவனம் ஸ்டோன் பெஞ்ச். ஸ்டோன் பெஞ்ச் எப்பொழுதும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும். அவர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி, ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தாருங்கள் நன்றி,” என்றார்.
777 சார்லியை ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜிஎஸ் குப்தா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை தமிழில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜும், தெலுங்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டக்குபதியும், மலையாளத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரனும் வழங்குகிறார்கள்.
மைசூர், பெங்களூரு, சிக்மங்களூர், கோவா, பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் 777 சார்லி படமாக்கப்பட்டுள்ளது. ராஜ் பி ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை நோபின் பால் அமைத்துள்ளார். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை பிரதீக் ஷெட்டியும் கையாண்டுள்ளனர்.