அண்ணன், தங்கை பாசக் கதையான ‘கங்காரு’ படத்தில் தங்கையாக நடித்திருப்பவர் பிரியங்கா.
நாளை மறுநாள் 24ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது,
“நான் நடித்த முதல் படமான ‘அகடம்’ ஒரு கின்னஸ் சாதனைப் படம். அடுத்த படம்தான் ‘கங்காரு’. இந்தப் படம் நல்ல கதைக்காகவும், சிறந்த நடிப்புக்காகவும் பேசப்படும் படமாக, ஒரு சாதனைப் படமாக இருக்கும் என நம்புகிறேன்.
என் கேரக்டரில் நடிக்க பலர் வந்து இருந்தாலும் என்னையே படத்தின் இயக்குனர் சாமி சார் தேர்வு செய்தார். தேர்வு செய்யும் போது ஸ்டில்ஸ் எடுத்தார்கள், 2,3 வசனம் பேசச் சொன்னார்கள். ஒரு எமோஷனல் சீனை நடித்துக் காட்டச் சொன்னார் இயக்குனர். கிளிசரின் இல்லாமல் நடித்துக் காட்டினேன், அவ்வளவுதான் அது பிடித்துப் போய்சாமி சார் ‘நீதான் படத்தில் குட்டி கங்காருவா நடிக்கிறே’ என்றார்.
அதே போல் படப்பிடிப்புத் தொடங்கிய இரண்டாவது நாளே ஒரு காட்சி. என் காதலர் இறந்து விடுவார். படிகளில் ஓடி வந்து அழ வேண்டும். அப்போது படி சறுக்கி கைகளில் அடிபட்டு சிராய்ப்பு, எல்லாம் வந்து விட்டது. அப்போதும் கிளிசரின் இல்லாமல் அழுது நடித்தேன். அடிபட்டும் நான் நடித்ததைப் பார்த்து யூனிட்டே கண்கலங்கினார்கள்.
படத்தில் அர்ஜுனா என் அண்ணனாக நடித்திருக்கிறார். நடிக்கும் முன் நாங்கள் கலந்து பேசி புரிந்து நடித்தோம். எதையும் ஒரு முறை மானிட்டர் பார்த்து நடித்தது சுலபமாக இருந்தது.
சாமி சார் நான் நடித்த ஒரு காட்சியில் ‘நான் எதிர் பார்த்ததை விட நல்லா பண்ணிட்டே ‘என்றார். எனக்கு அப்போதே விருது கிடைத்த மகிழ்ச்சி. படத்தின் வெற்றி அடுத்த விருதாக அமையும் என்று நம்புகிறேன்,” என்கிறார்.