நயன்தாரா, ஆரி மற்றும் பலர் நடித்த ‘மாயா’ திரைப்படம் கடந்த வாரம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தின் வெற்றி விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, படத்தின் இயக்குநர் அஷ்வின் சரவணன், நடிகர்கள் ஆரி , அம்ஜத் கான் , ஒளிப்பதிவாளர் சத்யா , படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
முதலாவதாக பேசிய நடிகர் ஆரி,
“மாயா‘ படத்தின் வெற்றி எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முழுமையான வெற்றியை சுவைக்க, நான் வெகு நாட்களாகக் காத்துக் கொண்டு இருந்தேன். நான் மாயா படத்தில் நடிக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் எல்லோரும் வந்து என்னிடம் ஏன் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கிறீர்கள் என்று என்னிடம் வருத்தமாகக் கேட்டார்கள்.
அவர்கள்எழுப்பிய கேள்விக்கு மாயாவின் வெற்றி பதில் சொல்லியுள்ளது. படம் தெலுங்குலும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி. நேற்று தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பில் என்னை பார்த்த ஒருவர் நான் யார்என்பதைக் கண்டறிய முடியாமல் என்னை பார்த்துக் கொண்டே இருந்தார். பின்னர் சுதாரித்த அவர், “நீங்கள் ‘மயூரி’ படத்தின் நாயகன் தானே” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்த் ‘மாயா’ படத்தைப் பார்த்து விட்டு புகழ்ந்து பேசியுள்ளது எங்களுக்கு மிகப் பெரிய ‘பூஸ்ட்-அப்’பாக அமைந்துள்ளது,” என்றார்.
நடிகர் அம்ஜத் பேசும் போது, “படத்தின் இயக்குநர் அஷ்வின் சரவணன் என்னுடைய நெருங்கிய நண்பர். இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் நான் இந்தப் படத்தில் நிச்சயம் எதாவது ஒரு சின்ன வேடத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். அஷ்வின் சரவணன் இந்த படத்துக்கு என்னை ஆடிஷன் செய்து தான் நடிக்க வைத்தார். நான் நண்பனாக இருந்த போதும் என்னை ஆடிஷன் செய்து தான் எடுத்துக் கொண்டார். அந்த அளவுக்கு அவர் படம் நன்றாக வரவேண்டும் என்று சுயநலத்தோடு உழைத்தார் என்றார் அம்ஜத்.
படத்தின் தெலுங்கு விநியோஸ்தகர் கல்யான் பேசும் போது , “நான் ‘மாயா’ படத்தை முதல் முறை பார்த்தவுடன் இந்த படத்தை நான்தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ‘மாயா’ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் தெலுங்கில் ஐந்தரை கோடியை வசூலித்துள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும்,” என்றார்.
படத்தைப் பற்றி இயக்குநர் அஷ்வின் சரவணன் கூறும் போது,
“மாயா’ படத்தின் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது, எனக்கு நிறைய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் என்னை கண்மூடித்தனமாக நம்பி இந்த படத்தை தயாரித்துள்ளார். மாயா படத்தை எடுக்கும் போது படத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறி தான் முடித்தேன்.
இப்போது எனக்கு இரண்டாம் பாகத்தை இவ்வாறு எடுக்கலாம், அவ்வாறு எடுக்கலாம் என்று புதுப் புது கதைகளை என்னை சந்திக்கும் பலர் கூறி வருகிறார்கள். அவர்கள் என்னிடம் இப்படி கதைகளைச் சொல்லும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வருகிறது. நிச்சயம் நல்ல கதை அமைந்தால் மாயா படத்தின் பாகம் இரண்டை எடுப்பேன்,” என்றார் இயக்குநர்.
இறுதியாக பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு “மாயாவின் வெற்றி எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையும், மன பலத்தையும் தந்துள்ளது. படத்தில் நயன்தாரா நடித்திருக்கவிட்டால் படம் எந்த அளவுக்கு மக்களிடம் போய் சேர்ந்திருக்கும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை,” என்றார்.