விஷால் பிலிம் பாக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஷால், ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘சக்ரா’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் பார்வையை இன்று இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்டார்.
படம் பற்றி இயக்குனர் ஆனந்தன் கூறுகையில்,
“குடும்ப உணர்வுகளோடு, தொழில் நுட்பம் சார்ந்த ஆக்ஷன் திரில்லர் மற்றும் தேசபக்தியோடு உருவாகும் படம் தான் ‘சக்ரா’.
தொழில் நுட்பம் சார்ந்தது என்பதால் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுப் படமாகவும் இருக்கும்.
அறிமுக இயக்குநருக்கு முதல் படத்திலேயே பெரிய நாயகன் கிடைப்பது அதிர்ஷ்டம். அதிலும், விஷால் நாயகனாக கிடைத்தது என்னுடைய மிகப் பெரிய அதிர்ஷ்டம்.
ஒரு இயக்குநராக ‘சக்ரா’ படத்திற்கு கதை எழுதும்போதே இந்த மிலிட்டரி அலுவலர் கதாபாத்திரத்திற்கு முதலில் தோன்றியது விஷால் தான். ஏனென்றால், இப்படியொரு வலிமையான கதாபாத்திரத்தை படம் முழுக்க சிதையாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் பக்குவமாகக் கையாளும் திறமை வாய்ந்தவர் விஷால். அதேபோல், விஷாலும் சிறப்பாக நடித்து வருகிறார்.
விஷால் எதற்காக மிலிட்டரி அலுவலராக இருக்கிறார் என்பதற்கு முக்கிய காரணம் இருக்கும். கதையோடு சேர்ந்து ஒரு புள்ளியில் இணையும். அது படம் பார்க்கும் போது தான் புரியும். மேலும், பெண் காவல் துறை அதிகாரி பாத்திரம் இருக்கிறது. அதை நான் உருவாக்கிய கதாபாத்திரமாக பார்க்க வேண்டுமென்றால், வித்தியாசமான முக அமைப்பு கொண்ட நடிகையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஷ்ரத்தா ஸ்ரீனிவாஸ் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கதாபாத்திரத்தைப் பற்றி கூறினேன். அவரும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்/
பொதுவாக ஒரு இயக்குநருக்கு கதை எழுதும் போது அப்படியே அதைக் காட்சி படுத்துதல் என்பது எளிதானதல்ல. எனக்கும் அப்படித்தான். ஆனால், எனது ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் ஒவ்வொரு காட்சியும், நான் எழுதியதை அப்படியே காட்சிப்படுத்திய தருணங்கள் மறக்க முடியாதவை.
சென்னையில் நடக்கும் கிரைம் கதை என்பதால் சென்னை மற்றும் கோயம்பத்தூரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. 2020-ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
ரெஜினா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரோபோ ஷங்கர், ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா, மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு ஷமீர் முகமதுவும், சண்டை பயிற்சியை அனில் அரசும், கலையை எஸ்.கண்ணனும் கவனிக்கிறார்கள். உடைகள் – சத்யா, பல்லவி சிங், ஜெயலட்சுமி சுந்தரேசன் பகிர்ந்து கொள்கிறார்கள். மக்கள் தொடர்பு ஜான்சன் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை ஆண்டனி சேவியர்.