‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை புரிந்துள்ளது.
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கேரளாவில் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது. அதே தினத்தில் இதர ஊர்களில் முக்கியமான திரையரங்குகளில் மட்டுமே வெளியானது.
மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்ததால், சமூக வலைதளத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் குறித்த பதிவுகள் அதிகமானது. இதனை முன்வைத்து திரையரங்குகள் அதிகரித்தது. மேலும், குணா குகை, குணா படத்தின் பாடல், இளையராஜா பாடல்கள் என தமிழ் மக்களுக்கு நெருக்கமாக இந்தப் படம் அமைந்திருந்தது.
இதனால் கேரளாவுக்கு நிகராக தமிழகத்திலும் திரையரங்குகள் அதிகமானது. ஒரு கட்டத்தில் கேரளா வசூலை பின்னுக்கு தள்ளி தமிழக வசூல் முதல் இடத்தினைப் பிடித்தது. சென்னை மட்டுமன்றி பல்வேறு ஊர்களில் கூட இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.
தற்போது 12 நாட்களில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இன்னும் கூட்டம் குறையாமல் இருப்பதால் இன்னும் பல்வேறு சாதனைகளை ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மலையாளத்தில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் 4-வது இடத்தை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.