’தக் லைப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தக் லைப்’. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் முடிவு பெற்றதுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு செர்பியா நாட்டில் தொடங்க படக்குழு ஆயுத்தமாகி வருகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.கே.எஃப்.ஐ நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.
இதில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தற்போது இந்தக் கூட்டணியிலிருந்து துல்கர் சல்மான் விலகியிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பதிவிலிருந்து ‘தக் லைப்’ படத்தின் போஸ்டரை நீக்கியிருக்கிறார்.
இதற்கான காரணம் ‘புறநானூறு’ படம் தான் என்று கூறப்படுகிறது. சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘புறநானூறு’. இதில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சூர்யாவுக்கு ஏற்பட்ட சிறு விபத்தினால் இதன் படப்பிடிப்பு தடைபட்டது.
தற்போது மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ‘புறநானூறு’ – ‘தக் லைப்’ ஆகிய படங்களின் தேதிகள் ஒன்றாக இருப்பதால், ‘தக் லைப்’ படத்திலிருந்து விலகியிருக்கிறார் துல்கர் சல்மான். தற்போது அவருக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார்கள் என்பது விரைவில் தெரியவரும்.