கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிம்பு, த்ரிஷா மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்து அப்போதைய இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.
கடந்த பல வருடங்களாகவே அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை கௌதம் மேனன் இயக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை எப்படி எடுக்க வேண்டும் என போன் மூலமே கௌதம் மேனன் விளக்கிச் சொன்ன வீடியோ ஒன்றை த்ரிஷா வெளியிட்டிருந்தார். அது எதற்காக என்பது இன்றுதான் புரிந்தது.
‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற டீசர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் கௌதம் மேனன். இந்த வீடியோவை எப்படி எடுப்பது என்றுதான் அன்று கௌதம் மேனன், த்ரிஷாவுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார் போலிருக்கிறது.
இந்த டீசரைப் பார்த்ததும் ரசிகர்கள் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் என பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால், டீசரில் த்ரிஷா பேசும் வசனத்தைப் பார்க்கும் போது அதில் ‘ஓடிடி’ தளங்களை வரவேற்றுப் பேசியுள்ளார். எனவே, ‘விண்ணைத் தாண்டி வருவாயா 2’ படத்திற்கு ஒரு முன்னோட்டமாக ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்காக இந்த ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தை எடுத்து கௌதம் மேனன் வெளியிட உள்ளார் எனத் தெரிகிறது.
“ஒரு நம்பிக்கை இருக்கிறது, விரைவில் ஒரு குறும்படம்” எனத் தெரிவித்துள்ளார் கௌதம் மேனன்..
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘குயின்’ என்ற பெயரில் ஓடிடி தளத்திற்காக கௌதம் மேனன் இயக்கி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.