தமிழ்த் திரைப்படங்களுக்கு டைட்டில் வைப்பதில் தற்போது ஒரு புதிய பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது. ‘துப்பாக்கி’ படத்திற்கும் ‘கள்ளத் துப்பாக்கி’ படத்திற்கும் இடையே டைட்டில் பிரச்சனை ஏற்பட்டு, இதற்கான வழக்கு தற்போது நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தற்போது மற்றுமொரு டைட்டில் பிரச்சனை புதிதாக உருவெடுத்துள்ளது. ஆனால் இந்த முறை ஒரே டைட்டில் இரண்டு படங்களுக்கு வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட பிரச்சனை. பல வருடங்களுக்கு முன் கார்த்திக் முன்னணி நடிகராக இருந்த போது தயாரான ‘சுந்தரபாண்டியன்’ என டைட்டில் வைக்கப்பட்ட படம் சில வாரங்களுக்கு முன் வெளிவர இருப்பதாக வந்த விளம்பரத்தைப் பார்த்து அனைவருமே குழம்பிப் போனார்கள். ஒரே டைட்டிலில் இரண்டு படமா என்று ?
இது சம்பந்தமாக கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘சுந்தரபாண்டியன் ’ படத்தின் பிரஸ்மீட்டில் தயாரிப்பாளர் சசிகுமாரிடம் கேட்ட போது கூட, தயாரிப்பாளர் சங்கம் அதிகாரபூர்வமாக அனுமதி அளித்த பிறகுதான் அவர்களது படத்திற்கான டைட்டில் வைக்கப்பட்டது என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது கார்த்திக் நடித்த சுந்தரபாண்டியன் படத்திற்கு அந்த படத்தை தயாரித்துள்ள ஜுபிடர் பிலிம் மேக்கர்ஸ் நிறுவனத்தினர், கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாராகி வெளிவர உள்ள சுந்தரபாண்டியன் பட டைட்டிலுக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளனர்.