‘விஸ்வரூபம்’ டிடிஎச்-ல் பிப்ரவரி மாதம் 2ம் தேதியன்று ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் ஜனவரி 25ம் தேதியன்று வெளியாக இருக்கிறது. திரைக்கு வந்த ஒரு வாரம் கழித்து டிடிஎச்-ல் ஒளிபரப்பப்பட இருக்கிறது.
இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
“திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘விஸ்வரூபம்’ திரைப்டத்தின் டிடிஎச் வெளியீடு வேறு ஒரு நாளுக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 2ம் தேதியன்று டிடிஎச்-ல் விஸ்வரூபம் ஒளிபரப்பாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நாளில் காட்டப்பட இருக்கிறது. விரைவில் டிடிஎச்-ல் ‘விஸ்வரூபம்’ படத்தை ஒளிபரப்பு செய்ய இருக்கும் நிறுவனங்கள் எவை என்பதை அறிவிப்பேன்.
பழைய கட்டணத்தில் இருந்து குறைக்கப்பட்ட புதிய கட்டணம் பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும். அது மட்டுமல்ல அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக மூன்று வித ஒளிபரப்பு நேரங்களில் அவரவர்க்கு வசதியான ஒரு நேரத்தை தெரிவு செய்து கொள்ளும் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் விருப்பப்பட்டால் அவர்களுடைய கட்டணம் திருப்பி அளிக்கப்படும், அல்லது புதிய ஒளிபரப்புக்கேற்றபடி அந்தந்த நிறுவனங்களால் சரி செய்யப்படும்.
கொஞ்சம் தாமதமானாலும் இந்தியாவில் விஸ்வரூபம் டிடிஎச் வெளியீடு ஒரு முக்கிய நிகழ்வாக அமையும்,” என்று தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் அறிக்கை படிக்க இங்கே ‘க்ளிக்’ செய்யவும்.