“எங்கேயும் எப்போதும், ராஜா ராணி’’ படங்களைத் தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டியோஸ், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘குக்கூ’ படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது.
ராஜு முருகன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தினேஷ், மாளவிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசையை கமல்ஹாசன் வெளியிட சூர்யா பெற்றுக் கொண்டார். டிரைலரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட இயக்குனர் லிங்குசாமி பெற்றுக் கொண்டார்.
திரையரங்கில் காட்டப்பட்ட டிரைலரும், இரண்டு பாடல்களும் அனைவரது கைதட்டல்களைப் பெற்றன. பார்வையற்ற இருவரின் காதலை விவரிக்க உள்ள இப்படம் வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்ட வேறு ஒரு களத்தில் பயணிக்க உள்ள படமாக இருக்கும் என்றே தோன்றியது. படக் குழுவினரை அனைவருமே பாராட்டித் தள்ளினர்.
விழாவில் நடிகர் சூர்யா பேசும் போது,
“எல்லாருக்குமே இன்ஸ்பிரேஷன் வேணும். அப்படி இருந்தால்தான் ஒரு பாதை கிடைக்கும். எல்லாருக்குமே தெரியும், ஒரு பாதையை நான் வரைஞ்சிக்கிட்டு, அதுல நடக்கிறன்னா அது கமல் சார் போட்டுக் கொடுத்த பாதைதான்.
நான் வந்து என்னை இப்படி மாத்திக்கிட்டேன், இப்படி போயிட்டிருக்கேன்னா அதுக்கு முழு உருவம், இலக்குக்குக் காரணம் கமல் அண்ணன்.
நான் முன்னாடிலாம் அவரை சித்தப்பான்னு சொல்லியிருக்கேன். சித்தப்பான்னா அன்னியமா இருக்கு. அண்ணன்னு சொன்னால்தான் அந்த அக்கறை கிட்டயே இருக்கு. அன்பா நினைச்சிருக்கா, நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்திருக்காரு, கண்காணிச்சிட்டிருக்காருன்னு தெரியும்.
‘குக்கூ’ படத்துக்காக இயக்குனர் ராஜு முருகன் நிறைய கம்பெனி போயிட்டு வந்திருக்காரு. இந்த படத்துக்காக இப்ப கிடைச்ச கைதட்டே அவ்வளவு அழகா இருந்தது. இந்த முதல் முயற்சி, முதல் உழைப்பு ரொம்ப நல்லாருக்கு.
இந்த குழு எல்லாத்துக்குமே ஒண்ணே ஒண்ணு பண்ணணும்னு நினைக்கிறேன். தலை வணங்குகிறேன்.
டிரைலரைப் பார்த்ததும், அப்படியே ‘டங்கு’னு அடிச்ச மாதிரி இருந்தது. அவ்வளவு உணர்வு பூர்வமா இருக்கு.
ராஜு முருகன் , இந்த படத்துக்கப்புறமா உங்களுக்கு எல்லா கதவுகளும் திறக்கும். நாங்களும் ‘2டி’ன்னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கோம். உங்களுக்காக எங்க கம்பெனி கதவுகளும் திறந்திருக்கு, ” என்றார்.
