சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதையடுத்து அவருக்கு பல படங்களை இயக்க வாய்ப்புகள் வந்தன.
இருந்தாலும் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்க ஒப்பந்தமானார். உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடிக்க ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தை இயக்கினார். ஆனால், இந்தப் படம் ரசிகர்களை பெரிதாகக் கவரவில்லை. அடுத்தும் அவர் உதயநிதி நடிக்கும் படத்தை இயக்குவதாகவே செய்திகள் வெளிவந்தன. இருந்தாலும், எஸ்.ஆர்.பிரபாகரனுக்கும், உதயநிதிக்கும் ஏதோ ஒரு பிரச்சனை வர, பிரபாகரன் அந்த பிராஜக்ட்டிலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து “கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே” படங்களைத் தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க பிரபாரகன் ஒப்பந்தமானார் என செய்திகள் வெளியாகின.
தற்போது புதிய கதை ஒன்றை எழுதி அதை இயக்கவும் பிரபாகரன் ரெடியாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தின் செல்லப் பிள்ளையான சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கப் போகிறார் என்றும் தெரிகிறது.
ஆனால், இது பற்றிய எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சிவகார்த்திகேயன் தற்போது தனுஷ் தயாரிப்பில் ‘டாணா’ படத்தில் நடித்து வருகிறார். தனக்குத் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்த எஸ்கேப் நிறுவனத் தயாரிப்பில், சிவகார்த்திகேயன்தான் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளது என கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.