தெலுங்கில் நம்பர் 1 நடிகை, ஆனால் தமிழிலோ இதுவரை ஒரு படம் கூட வெற்றி பெறவில்லையே என்ற வருத்தத்தில் இது வரை இருந்தார் சமந்தா.
அவரை ‘கத்தி’ படத்தின் வெற்றி முழுவதுமாக மாற்றி விட்டது. இதற்கு முன் சமந்தா சூர்யா ஜோடியாக நடித்த ‘அஞ்சான்’ படம் கூட அவருடைய கிளாமரைப் பற்றி மட்டுமே பேச வைத்தது.
‘கத்தி’ படத்தில் மிகப் பெரிய முக்கியத்துவம் இல்லையென்றாலும் கதைக்குத் தேவையான அளவில் மட்டுமே, கிளாமர் கூட இல்லாமல் சமந்தா நடித்திருப்பது வரவேற்புக்குரியதாகவே அமைந்துள்ளது.
‘கத்தி’ படம் பற்றி வெளிவந்த விமர்சனங்களும், செய்திகளும் சமந்தாவை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அது பற்றி கருத்து தெரிவித்த சமந்தா, “ஒரு வழியாக ஒரு போராட்டம் முடிவுக்கு வந்தது, தமிழில் ஒரு ஹிட் கிடைத்து விட்டது. இனி, என் கைகளை அழுக்காக்கிக் கொள்ளப் போகிறேன். கிளாமரை விட்டு விட்டு, இனி 2015ல் நடிக்க நல்ல வாய்ப்புள்ள படங்களில் மட்டுமே நடிக்கப் போகிறேன்.
‘கத்தி’ ஒரு அருமையான கருத்தை அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு படத்தில் நடித்ததை பெருமையாகக் கருதுகிறேன். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் சார், இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஆகியோருக்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
‘கத்தி’ படத்தின் வெற்றி சமந்தாவை இனி நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கக் கூடிய முடிவை எடுக்கக் காரணமாக அமைந்து விட்டது.