தயாரிப்பு – வேந்தர் மூவீ ஸ் எஸ்.மதன் வழங்க, வி.பி. புரொடக்ஷன்ஸ் – விஸ்வாய் யு லாட் , வி புருஷோத்தமன்.
இயக்கம் – அஸ்லம் இசை – ஜேம்ஸ் வசந்தன் ஒளிப்பதிவு – ஜே. லஷ்மண் படத்தொகுப்பு – கெவின்
நடிப்பு – ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர், சூரி, பாண்டி, கோவை சரளா மற்றும் பலர்.
திரைப்பட ரசிகர்கள் எதை விரும்புவார்கள் என்பதை சரியாகப் புரிந்து கொண்டு படங்களைத் தரும் இயக்குனர்களே தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அறிமுக இயக்குனர் தனது முதல் படத்தைக் கொடுக்கிறார் என்றால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது, ஆனால் அவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை திரையுலகத்தினரும், படத்தை நன்றாக எடுத்திருப்பாரா என ரசிகர்களும் ஒரு வித சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.
இந்த பாகன் படத்தைப் பொறுத்தவரை மேற் சொன்னவற்றை பற்றி நம்மை மேற் கொண்டு பேச வைக்காமல் ஒரு கலகலப்பான காதல், காமெடி படத்தை அருமையாகக் கொடுத்து திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்று விட்டார் இயக்குனர் அஸ்லம். ரசிகர்களின் நாடியை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். வாழ்த்துக்கள் ஸார்.
ஒரு சைக்கிள் தன் வரலாறு கூறுவதுதான் கதை. ஆரம்பத்திலேயே சைக்கிள் பேசுவதாக வரும், என்னங்க பாரதிராஜா கதை சொன்னா கேக்கறீங்க, கௌதம் மேனன் கதை சொன்னா கேக்கறீங்க, ஏன் நான் சொன்னா கேக்க மாட்டீங்களா ? என வரும் காட்சியிலேயே இயக்குனரின் நகைச்சவை உணர்வு வெளிப்பட்டு விடுகிறது. சரி, சைக்கிள் அதன் ‘பாகன்’ பற்றி சொன்ன கதை என்னவென்று பார்ப்போம்.
பொள்ளாச்சியில் ஒரு சாதாரண ‘சோடா கந்தன்’ மகன் சுப்பிரமணி (ஸ்ரீகாந்த்). இவருடைய நண்பர்கள் வெள்ளியங்கிரி (சூரி), மாகாளி (பாண்டி). இவர்களுடைய வேலையே ஏதாவது ஒரு புராஜக்ட் ஆரம்பித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதுதான். இந்த புராஜக்ட்களுக்கு தலைவர் ஸ்ரீகாந்த், தக்காளி வியாபாரத்தில் ஆரம்பித்து, பால் பண்ணை, கோழிப் பண்ணை என ஆரம்பித்து அனைத்திலுமே நஷ்டப்படுகிறார்கள். முடிவாக யாராவது ஒரு பணக்காரவீட்டு பெண்ணை காதலித்து வாழ்க்கையில் செட்டிலாவது என புது யோசனைக்கு, ஸாரி புது காதல் புராஜக்ட் ஆரம்பிக்கிறார் ஸ்ரீகாந்த். அப்படி அவர் தேர்ந்தெடுக்கும் பெண், அந்த ஊரின் பெரிய மனிதரான மாணிக்க கவுண்டரின் (ஏ.வெங்கடேஷ்) மகள் மகாலட்சுமி (ஜனனி ஐயர்). ஆனால், ஸ்ரீகாந்த்தின் புராஜக்ட் திட்டம் பற்றி அறியாக ஜனனி, ஸ்ரீகாந்தை உண்மையாகவே காதலித்து , ஒரு கட்டத்தில் கட்டிய புடவையுடன் , சாரி, போட்டிருந்த சுடிதாருடன், வீட்டை விட்டு வர, சொத்தோடு வராத ஜனனியை ஏற்க மறுத்து, நட்ட நடு வீதியில் விட்டு விட்டுச் செல்கிறார். அதன் பின், …..அட போதுங்க….மீதி கதைய படத்துல பாருங்க….
சைக்கிள் ‘பாகன்’ சுப்பிரமணியாக ஸ்ரீகாந்த். இதுதான் நமக்கான புராஜக்ட்னு பத்தாம் வகுப்பு பெயிலானாலும் புகுந்து விளையாடியிருக்காரு சுப்பிரமணி கேரக்டர்ல. சிட்டி லுக்குல இருக்கிற ஸ்ரீகாந்த், பொள்ளாச்சி லுக்குக்கும் பொருத்தமாத்தான் இருக்காரு. அவர் பண்ற ‘தில்லாலங்கடி’, ‘தில்லு முல்லு’, ‘அஜால் குஜால்’ எல்லாமே…சரியான சரவெடிதான். ஜனனியை விழுந்து விழுந்து காதலிச்சிட்டு அது எல்லாமே பணத்துக்காகன்னு அவர் சொல்லும் போது, அடப்பாவின்னு அந்த கேரக்டரைப் பத்தி அழகா பேச வச்சிடறாரு…அப்புறமா, ஜனனியோட காதலைப் புரிஞ்சிகிட்டு அவர் பண்ற வேலைகளும் ரசிக்க வச்சிருக்கு. அவர் மேல அனுதாபப்படவும் வச்சிருக்கு.
மகாலட்சுமி ஆக ஜனனி ஐயர். இந்த மகாலட்சுமி புடவை கட்டிய பாந்தமான மகாலட்சுமி அல்ல. மாடர்ன் மகாலட்சுமி. ஸ்ரீகாந்த் சாகலாம் என முடிவெடுத்து சாவது போன்று நாடகமாடும் போது, அங்கு வந்து இந்த மகாலட்சுமி ஒரு குத்தாட்டம் போடுகிறார் பாருங்க…அது போதும்…இவருடைய கதாபாத்திரத்தை புரிய வைப்பதற்கு…வாய்ப்புள்ள காட்சிகளில் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார்.
படத்தின் கலகலப்புக்கு பெரும் பங்கு வகிப்பவர்கள் ஸ்ரீகாந்தின் அம்மாவாக வரும் கோவை சரளா, ஸ்ரீகாந்தின் நண்பர்களான சூரி, பாண்டி. அதிலும் சூரி, பாண்டி இருவரும் படம் முழுவதும் வருகிறார்கள். புது காம்பினேஷன் நன்றாகவே இருக்கிறது. இருவரும் பயன்படுத்திக் கொண்டால் நல்லது. ‘காதலிக்கிறவனுக்கு மட்டும் ஃபிரண்டாவே இருக்கக் கூடாதுடா ’ என சூரி சொல்லும் போது அரங்கமே அதிர்கிறது.
‘ 25 வருஷம் என்னை உக்கார வச்சி சோறு போடும் போது ஒன்னும் தெரியலம்மா, ஆனால் ஒரு நாள் வெளிய சோறு இல்லாம தவிச்ச போதுதான், அம்மாவோட அருமை புரிஞ்சுதும்மா ’ என ஸ்ரீகாந்த், கோவை சரளாவிடம் பேசும் காட்சி குடும்பத்தின் அருமையையும், உழைப்பின் உன்னதத்தையும் புரிய வைக்கும்.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. லஷ்சுமன் ஒளிப்பதிவு பொள்ளாச்சியின் அழகை அருமையாகப் படமாக்கியுள்ளது.
‘பாகன்’ – பார்த்துடுங்க….