கண் பேசும் வார்த்தைகள் – விமர்சனம்

தயாரிப்பு – ஸ்ரீ பாலாஜி சினி கிரியேஷன்ஸ் திரைக்கதை , இயக்கம் – ஆர். பாலாஜி இசை – ஷமந்த் கதை – ஆர். சரவணகுமார் வசனம் – செந்தில்குமார் பாடல்கள் – விவேகா படத்தொகுப்பு – சாபு ஜோசப் சண்டைப் பயிற்சி – தவசி ராஜ் மக்கள் தொடர்பு – சரவணன் வெளியான தேதி – 22 மார்ச் 2013

‘பணம் சம்பாதிச்சி பெரிய ஆளாகி, அழகான பெண்ணை திருமணம் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ’ ஆகத் துடிக்கும் ஒரு இளைஞனின் சராசரி கனவை  சராசரியாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி.

ஊரில் ‘பாட்மிண்டன்’ விளையாடிக் கொண்டு வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கும் செந்தில், பெற்றோரை மேலும் கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைத்து சிங்கப்பூருக்கு செல்கிறார். அங்கு பெரியப்பா மகனால் அவமானப்பட, பணம் சம்பாதித்து பெரிய ஆளாகி சிங்கப்பூர் சிட்டிசனாக மாறி விட வேண்டும் என நினைக்கிறார். அவர் முயற்சியும் ஆசையும்  வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.

‘சரவணன் மீனாட்சி’ தொடரின்  ‘ஹேங் ஓவர்’ ல இருந்து செந்தில் இன்னும் வெளியவே வரவில்லை. பல காட்சிகளில் சரவணன் மட்டுமே எட்டிப் பார்க்கிறார். அவர் பேசும் வசனங்கள்  ரேடியோ வர்ணனை போல் வேறு கேட்கிறது. ஏதாவது ஒரு காட்சியிலாவது அவர் கண் நடிப்பில் பேசி விடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே.

இனியா போன்ற நடிகைகளை தமிழ்த் திரையுலகம் ஏன் இப்படி வீணடிக்கிறது எனத் தெரியவில்லை. முதல் படத்தைத் தவிர அடுத்தடுத்து இவர் நடித்து வரும் படங்கள் எல்லாமே இனிமை என்று சொல்ல வைக்க மாட்டேன் என்கிறது.

செந்தில் காதலுக்கு உதவியாக முருகதாஸ், இனியா காதலுக்கு உதவியாக மதுமிதா, வில்லனாக நான் கடவுள் ராஜேந்திரன் உறுமலுடன் சரி.

ஷமந்த் இசையில் ‘மதிவதனி…, ஆறாம் அறிவிலே’ ரசிக்க வைத்துள்ளது.

நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்துமே பளிச் என்று இருக்கிறது.

எந்த விறுவிறுப்பும், திருப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது படத்திற்கு பெரிய மைனஸ் பாயின்ட். பெரிய திரையில் ஒரு சிறிய திரை.

‘கண் பேசும் வார்த்தைகள்’ – மௌன மொழி…

Read Previous

கருப்பம்பட்டி – விமர்சனம்

Read Next

அர்ஜுன் இயக்கும் புதிய படம்…

Most Popular