சுதா கொங்காராவின் திட்டமிடலை பார்த்து சூர்யா வியப்படைந்துள்ளார்.
’இறுதிச்சுற்று’, ‘சூரரைப்போற்று’ ஆகிய படங்களின் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுதா கொங்காரா. தற்போது ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி முடித்துள்ளார். இதில் அக்ஷய்குமார் நாயகனாக நடித்துள்ளார்.
தமிழில் மீண்டும் சூர்யா நடிக்கும் ‘புறநானூறு’ படத்தை இயக்கவுள்ளார். இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஜிவிபிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இது ஜி.வியின் இசையில் உருவாகும் 100-வது படமாகும்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்கு இடையே, ‘புறநானூறு’ படத்துக்காக 4 பாடல்களை ஜி.வியிடம் முடித்து வாங்கிவிட்டார் சுதா கொங்காரா.
இதில் இரண்டு பாடல்கள் பாடல் வரிகள் கூட முழுமையாக முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், படப்பிடிப்பு தொடங்கினால் ஒரே கட்டமாக சுமார் 70% படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். அனைத்து நடிகர்களின் தேதிகளையும் திட்டமிட்டு வாங்கியிருக்கிறார் சுதா கொங்காரா.
இந்த திட்டமிடலைப் பார்த்து சூர்யா வியப்படைந்துள்ளார். ‘சூரரைப்போற்று’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளின் போதே, “சுதா ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு படத்தினை எடுக்க முடியும். ஏனென்றால் அவருடைய திட்டமிடல் அப்படி இருக்கும்” என்று பாராட்டியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.