ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
’இறைவன்’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘சைரன்’. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் வெளியீடாக இந்தப் படம் திட்டமிடப்பட்டது. ஆனால், படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைப் பேச்சுவார்த்தை முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் ஜனவரி 26-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக விசாரித்த போது, “அதில் உண்மையில்லை. ஜீ5 ஓடிடி தளத்திற்கு ‘சைரன்’ விற்பனை செய்யப்பட்டு உள்ளது உண்மை.
அதுவுமே இன்னும் அதிகாரபூர்வமாக கையெழுத்தாகவில்லை. ஆனால், நேரடி ஓடிடி வெளியீட்டிற்கு அல்ல. பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ‘சைரன்’ வெளியாகும்” என்று தெரிவித்தார்கள்.