சசிகுமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’சுப்பிரமணியபுரம்’ மற்றும் ‘ஈசன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு முழு நேர நடிகனாகவே மாறிவிட்டார் சசிகுமார். பல்வேறு படங்களில் நடித்து வந்தது, கடன் பிரச்சினைகள், படங்கள் தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களால் சசிகுமார் படம் இயக்குவது குறித்து யோசிக்கவே இல்லை.
ஆனால், கிடைத்த நேரத்தில் கதைகள் மட்டும் தொடர்ச்சியாக எழுதிவந்தார். விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனத்திற்காக ‘குற்றபரம்பரை’ கதையினை வெப்சீரிஸாக இயக்கவுள்ளார். இதில் சத்யராஜ், விஜய பிரபாகரன் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நயன்தாரா நடிக்கும் புதிய படத்தினை சசிகுமார் இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து விசாரித்த போது, அதில் உண்மையில்லை என்று சசிகுமாருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். இருவரும் சந்திக்கவே இல்லை, அப்புறம் எப்படி படம் நடக்கும் என்றும் குறிப்பிட்டார்கள். இப்போதைக்கு சில படங்கள் நடித்து முடித்துவிட்டு, முழு நேர இயக்குநராக ‘குற்றபரம்பரை’ வெப்சீரிஸ் மூலம் திரும்பவுள்ளார் சசிகுமார்.