கோகுல் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள படத்துக்கு ‘வைப் குமார்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.
வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவை நாயகனாக வைத்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தினை இயக்கவிருந்தார் கோகுல். ஆனால், அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. கொரோனாவினைத் தாண்டி மக்கள் வந்துவிட்டதால், அந்தக் கதையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டார் கோகுல்.
அந்தக் கதையினை விஷ்ணு விஷாலிடம் கூறினார். அவரும் உடனடியாக ஒ.கே சொல்ல இந்தக் கூட்டணி உறுதியானது. வேல்ஸ் நிறுவனவே தயாரிக்க முன்வந்தது. தற்போது இந்தப் படத்திற்கு ‘வைப் குமார்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.
மேலும், இந்தப் படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவருமே நடிக்கவில்லை என்பது தான் உண்மை. இந்தக் கதையின் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், இன்னும் ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை.
விரைவில் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.