அரசியலில் களம் காண இருக்கிறார் என்ற செய்திக்கு சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். சில வருடங்களாக தொடர்ச்சியாக தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
தற்போது இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்காக பல்வேறு நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இதில் காங்கிரஸ் கட்சியில் சஞ்சய் தத் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும், ஹரியாணா மாநிலத்தில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். முன்னணி நடிகர் என்பதால் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பலரும் விவாதிக்க தொடங்கினார்கள்.
இந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சஞ்சய் தத் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
“நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை, தேர்தலில் போட்டியிடவில்லை. நான் அரசியல் களத்தில் இறங்க முடிவு செய்தால், நானே முதலில் அறிவிப்பேன். தற்போது என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை நம்புவதைத் தவிர்க்கவும்”
இவ்வாறு சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.