விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கவிருந்த ‘BULL’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
’ஷேர்ஷா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இந்திப் படத்தின் பணிகளைத் தொடங்கினார் விஷ்ணுவர்தன். அவர் எழுதிய கதையினை தயாரிக்க கரண் ஜோஹர் முன்வந்தார். இதில் சல்மான்கான் நாயகனாக நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
‘BULL’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் சல்மான்கான் – விஷ்ணுவர்தன் கூட்டணியில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இந்தப் படம் தொடர்பான பாலிவுட் ஊடகங்கள், ”சல்மான்கான் தேதிகள் கொடுக்க முன்வந்த போது, இன்னும் நாட்கள் ஆகும் என்று கரண் ஜோஹர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியாக சல்மான்கான் தரப்பிலிருந்து கேட்ட போதும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இதனால் முழுமையாக கதையினை முடித்தவுடன் கொடுங்கள், பின்பு பார்த்துக் கொள்வோம் என சல்மான்கான் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளார்கள்.
இதனாலேயே உடனடியாக ஏ.ஆர்.முருகதாஸ் படம் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டு, தேதிகள் ஒதுக்கியுள்ளார் சல்மான்கான்” என்று தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பின் மூலம் சல்மான்கான் – விஷ்ணுவர்தன் இணையும் படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது.