ராம் கோபால் வர்மா இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
‘ஏஸ்’ மற்றும் ‘ட்ரெயின்’ ஆகிய படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த இரண்டு படங்களுமே முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இன்னும் டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. தன்னுடைய அடுத்த படங்கள் குறித்து விஜய் சேதுபதி இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
உடனடியாக பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்திற்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் சேதுபதி. இதனை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை முடித்துவிட்டு, ராம் கோபால் வர்மா இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து விசாரித்த போது, “ராம் கோபால் வர்மா சென்னை வந்து விஜய் சேதுபதியை சந்தித்து சுமார் 4 மணி நேரம் பேசினார். இதில் பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அடுத்த படமும் ஒன்று. உங்களுடைய படங்கள் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என விஜய் சேதுபதியும் ராம் கோபால் வர்மாவிடம் தெரிவித்தார்.
அவருடைய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், முழுமையாக கதை என்ன என்பதை திரைக்கதை வடிவமாக கொடுத்தவுடன் முடிவு செய்துக் கொள்ளலாம் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். ஆனால், இருவரும் இணைந்து படம் பண்ணுவது உறுதி” என்று தெரிவித்தார்கள்.