குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்ற ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு

 
 
 
வானமே எல்லை; குழந்தைகளின் கனவை நனவாக்கிய ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு
 
 
 
குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில், ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு “வானமே எல்லை” என்ற இனிய நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வின் மூலமாக, ஏழை எளிய குழந்தைகள், மாற்று பாலினத்தவர்கள் மற்றும் பார்வையற்றவர்கள் உள்ளிட்ட பலரையும் சென்னையிலிருந்து சேலம் வரை விமானத்தில் பயணிக்க வைத்து அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுத்தனர்.
 
சென்னையில் இருந்து சேலத்துக்கு வந்த குழந்தைகளை சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரிந்தா தேவி ஐஏஎஸ் உற்சாகமாக வரவேற்றார். இவர்களின் வரவேற்பு குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தந்தது. மேலும், இந்நிகழ்வில் பிரபல இயற்கை விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் நல்லெண்ண தூதர் ஏ.ஆர். ரைஹானா மற்றும் ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் உடன் பயணித்து குழந்தைகளின் நினைவுகளை சிறப்பாக ஆக்கினார்கள்,
 
சேலத்திற்குப் பின், குழு ஏற்காட்டுக்கு பயணித்து ஒரு அழகான ரிசார்டில் இரவு தங்கி, ஸ்கை பார்க், செர்வாய்ஸ் பாயிண்ட், ஏற்காடு படகு குழாம் போன்ற இடங்களை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இந்த பயணம் குழந்தைகளுக்கு இயற்கையின் அழகை உணர வைத்து, அவர்களது கனவுகளை மேலும் உயர்த்தும் வண்ணம் அமைந்தது.
 
அனைவரும் சேலத்திலிருந்து திரும்பும் வழியில் ரயிலில் மகிழ்ச்சியுடனும் இனிய நினைவுகளுடன் சென்னை திரும்பினர். இவ்வாண்டு “வானமே எல்லை” நிகழ்ச்சி ரெயின்ட்ராப்ஸ் அறக்கட்டளையின் முக்கியமான முயற்சியாகவும், நம்பிக்கையை ஊட்டும் மகிழ்ச்சியான அனுபவமாகவும் அமைந்தது என்று ரெயிண்ட்ராப்ஸ் சமூக அமைப்பு கூறியுள்ளது.  

Read Previous

கங்குவா – விமர்சனம்

Read Next

உண்மைச் சம்பவத்தை வைத்து தான் “மிஸ் யூ” படத்தை இயக்கினேன் – இயக்குனர் ராஜசேகர்