‘லால் சலாம்’ படத்துக்காக இசையில் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லால் சலாம்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்தப் படத்தின் ‘திமிரி எழுடா’ என்ற பாடலுக்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது இருவரது குரலையும் உபயோகப்படுத்தி தயார் செய்துள்ளார். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்.
இசை உலகில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை முதன் முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் உபயோகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது இருவரது குடும்பத்தினரிடமும் முறையான அனுமதி பெற்று, அதற்கான தொகையும் அளிக்கப்பட்டு இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.