’அமரன்’ படத்தின் பட்ஜெட் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் படக்குழுவினர் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அமரன்’. மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டது. இந்தக் காட்சிகளுக்கே படத்தின் பெரும்பாலான தொகையை செலவழித்துவிட்டது படக்குழு. அதற்குப் பிறகு சென்னை படப்பிடிப்பினை தொடங்கியது.
சென்னையில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக பலரும் நினைக்கிறார்கள். அது தான் இல்லை, இன்னும் 27 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. தொடர்ச்சியாக படத்தின் பட்ஜெட் எகிறிக் கொண்டே இருப்பதால் தயாரிப்பு தரப்போ கலக்கத்தில் இருக்கிறது.
இந்தப் படத்தின் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது. ஆனாலும், தொடரும் பட்ஜெட் அதிகரிப்பால் இயக்குநரை அழைத்து தயாரிப்பு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘அமரன்’ படப்பிடிப்பினை முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன்.