லைக்கா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்’.
படம் வெளியான அதிகாலை சிறப்புக் காட்சியிலிருந்தே தியேட்டர்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து படத்தைப் பார்த்து ரசித்து வருகிறார்கள். தியேட்டர்கள் பக்கம் அதிகம் வராதவர்கள் கூட இந்தப் படத்தைப் பார்க்க மிக ஆர்வமாய் இருக்கிறார்கள்.
சிறியவர்கள் முதற் கொண்டு பெரியவர்கள் வரை படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற பேரார்வத்தில் உள்ளார்கள்.
முதல் நாள் வசூலாக 80 கோடி வசூலித்ததாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம், மூன்று நாள் வசூலாக 200 கோடியைக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் இந்தப் படம் புதிய வசூல் சாதனையைப் படைத்து வருகிறது.
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படம் மிகப் பெரிய வசூலைப் பெறும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.