டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 10ல் வெளியாக உள்ள படம் ‘பராசக்தி’.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரவிமோகன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வந்த போதே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கதாநாயகனாக பல வருடங்களாக நடித்து வருபவர் வில்லனாக நடிக்க என்ன காரணம் என்ற கேள்வி வந்தது. அந்தக் கதாபாத்திரம் மீதுள்ள நம்பிக்கையால்தான் நடிக்க ஒத்துக் கொண்டார் ரவி மோகன்.
அது பற்றி அவர் கூறுகையில்,
‘பராசக்தி’ சாதாரண படம் அல்ல. எண்ணற்ற கடின உழைப்பாளிகளின் அர்ப்பணிப்பால் உருவான தலைசிறந்த படைப்பு இது. என் மீது நம்பிக்கை வைத்து மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் சினிமா பயணத்தின் இந்த தருணத்தில் நான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என பலர் கேள்வி எழுப்பினர். நான் ’பராசக்தி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முக்கிய காரணம் சுதா கொங்கரா மேடம் தான். அவரது படங்கள் எனக்கு எப்போதும் உத்வேகம் கொடுக்கும். அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்.
அதர்வா முரளி ஒரு அற்புதமான சக நடிகர். அவரது பாசிட்டிவ் எனர்ஜியை செட்டில் எல்லோரும் உணர்ந்தோம். இந்தப் படத்தில் அவரது நடிப்பும் கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பது உறுதி. ஸ்ரீலீலா அற்புதமான நடிகை. ‘பராசக்தி’ படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ்நாட்டில் இன்னும் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள்.

சிவகார்த்திகேயன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உள்ளது. பல தருணங்களில் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். படத்தில் அவர் மற்றவர்களை ஓவர்ஷேடோ (overshadowed) செய்கிறார் என்று ஒரு செய்தி உலவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. என்னுடைய கதாபாத்திரம் ஆழமானதாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இப்போதுள்ள முன்னணி கதாநாயகர்கள் அப்படி செய்வார்களா என தெரியவில்லை. சிவகார்த்திகேயனின் அன்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு இவை எல்லாம்தான் அவரது வளர்ச்சிக்கு காரணம்.
குறுகிய காலத்திலேயே நூறு படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ‘பராசக்தி’ படத்தில் அவரது அற்புதமான இசையை நிச்சயம் விரும்புவீர்கள்.
பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த பொக்கிஷம். படம் வெளியாவதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துள்ளேன். படம் பார்த்த பெருமையிலும் சந்தோஷத்திலும் சொல்கிறேன், நிச்சயம் ‘பராசக்தி’ உங்கள் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை ’பராசக்தி’ திரைப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை,” என்றார்.