ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'
'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஒன்றை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு 'லெவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர் சி இடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். 'சரபம்', 'சிவப்பு' மற்றும் 'பிரம்மன்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.
'லெவன்' திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், "ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அவர்களுக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி. அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படமான 'லெவன்' படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 23 அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
சிலைக் கடத்தல் பின்னணியில் அமைந்துள்ள 'பரம்பொருள்' படத்தின் பரப்பரப்பான டிரெய்லரை மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர்
இப்படம் செப்டம்பர் 01 முதல் திரையரங்கில் வெளியாகிறது
கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான 'பரம்பொருள்' திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.
சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர்.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, 'ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, 'டான்', 'சாணிக் காயிதம்', 'ராக்கி', 'எட்டு தோட்டாக்கள்' படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.
கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
'பரம்பொருள்' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. முன்னோட்டத்தை இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகையும் இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
தயாரிப்பாளர்கள் மனோஜ் & கிரிஷ் பேசியதாவது…
'பரம்பொருள்' படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம். இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் நன்றி. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம்.
இயக்குநர் மணிரத்னம் பேசியதாவது…
இந்நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'பரம்பொருள்' திரைப்படம் வெற்றிபெற அனைவரும் வாழ்த்துவோம்.
நடிகை மற்றும் இயக்குநர் சுஹாசினி மணிரத்னம் பேசியதாவது…
இங்கு வந்ததில் மகிழ்ச்சி. 'பரம்பொருள்' குழுவிற்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நடிகர் பாலகிருஷ்ணன் பேசியதாவது…
இத்திரைப்படம் மிகவும் நன்றாக உருவாகியுள்ளது. அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரவளிக்க வேன்டும்.
கலை இயக்குநர் குமார் கங்கப்பன் பேசியதாவது…
'பரம்பொருள்' கதை எல்லாருக்கும் பிடிக்கும். இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளனர். சரத்குமார் சார், யுவன் சார் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். 'பரம்பொருள்' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார் பேசியதாவது…
உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். அந்த வரிசையில் 'பரம்பொருள்' திரைப்படமும் இணையும் என்பதில் ஐயமில்லை.
ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி பேசியதாவது…
தயாரிப்பாளர்கள், இயக்குநர், அமிதாஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. படத்தின் தலைப்பு மற்றும் கதையைக் கேட்டதிலிருந்தே இதில் பணியாற்ற மிகவும் ஆவலாக இருந்தேன். சரத்குமார் சார் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கும் நன்றி.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…
இத்திரைப்படத்தை பார்த்து மிகவும் ரசித்து இதை வெளியிட விரும்பினேன். சரத்குமார் சார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'போர்த்தொழில்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 'பரம்பொருள்' படத்தை பார்த்து அதில் என்னை இணைத்துக் கொண்டேன். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. அனைவரும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். கதையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். அமிதாஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். 'பரம்பொருள்' நிச்சயம் வெற்றியடையும்.
நடிகர் வின்சன்ட் அசோகன் பேசியதாவது…
இப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் சிறப்பு அதன் திரைக்கதை. சரத்குமார் சார் மற்றும் அமிதாஷ் நன்றாக நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டுகிறேன்.
நடிகரும் இயக்குநருமான பாலாஜி சக்திவேல் பேசியதாவது…
'பரம்பொருள்' படத்தின் கதையை கேட்டு மிகவும் ரசித்தேன். அமிதாஷ் மற்றும் சரத் சார் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவரின் சிறப்பான ஒத்துழைப்புடன் படம் உருவாகியுள்ளது.
நடன இயக்குநர் சதீஷ் பேசியதாவது…
இந்தப் படம் யுவன் ஷங்கர் ராஜா சாருக்கு மிக முக்கியமான படமாக அமையும். சரத்குமார் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அமிதாஷ் மற்றும் கிரிஷ் சாருக்கு நன்றி. படம் வெற்றி பெற, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
இயக்குநர் சி. அரவிந்த் ராஜ் பேசியதாவது…
இக்கதையை சொன்னவுடன் சரத்குமார் சாருக்கும் அமிதாஷுக்கும் மிகவும் பிடித்தது. சின்ன பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளர்களின் ஆதரவால் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் 'பரம்பொருள்' திரைப்படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து ஆதரவை தர வேண்டும். தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நடிகர் அமிதாஷ் பேசுகையில்…
பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவு ஒரு படத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியம். 'பரம்பொருள்' படத்திற்கு மேலான ஆதரவை வழங்குமாறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரை கேட்டுக்கொள்கிறேன். சரத்குமார் சார் இந்த கதைக்கு தனது முழு ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா சார் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ் கிரிஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்திற்கு ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும் மிகவும் நன்றி. அனைவரும் படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டும். குறிப்பாக எனது பெற்றோருக்கு நன்றி.
நடிகர் சரத்குமார் பேசுகையில்…
இது குழு முயற்சி. திரையரங்குகளில் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம் 'பரம்பொருள்'. அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில்…
எனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது, அனைவரும் ரசிப்பார்கள் என்றும் நம்புகிறேன். அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி. 'பரம்பொருள்' குழு வெற்றிபெற வாழ்த்துகள்.