நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் விஷால், துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டவர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம், சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரை நடிகர் கமல்ஹாசன் முன்மொழிந்து வாழ்த்தியுள்ளார்.
வேட்பு மனு தாக்கலுக்குப் பின் நாசர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது?
“ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும் . கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்தோம். இந்த முறை வேறொரு களமாக இருக்கிறது . அதை சந்திக்கவேண்டியது கடமை.
நாங்கள் கடந்த 3 ஆண்டு காலம் செய்த பணிகள் சாட்சியாக நிற்கிறது. அதை நம்பி நாங்கள் போட்டியிடுகிறோம். எங்கள் சங்க உறுப்பினார்களின் மிகப் பெரிய ஆதரவு பாண்டவர் அணிக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தத் தேர்தலில் அரசியல் தலையீடு என்பது அறவே கிடையாது. இன்றைய சூழலில் அரசுக்கு இதைவிட பெரிய பொறுப்புக்கள் இருக்கிறது. அதை கவனிக்க வேண்டியவர்கள் அதையெல்லாம் விட்டு விட்டு இந்த சிறு அமைப்பில் குறுக்கிடுவார்கள் என்பது அவர்கள் மீது வைக்கும் தப்பான விஷயம்.
அரசு அல்லது கட்சிகளின் தலையீடு சுத்தமாக கிடையாது. தனிப்பட்ட முறையிலும் சரி பொதுவாகவும் சரி நான் எப்போதும் நம்புவதும் சரி இந்த அமைப்பு எந்த ஒரு பாகுபாடுமின்றி செயல்படும் . மத பாகுபாடோ அல்லது அரசியல் பாகுபாடோ, எந்த ஒரு பாகுபாடும் இல்லை.
நடிப்பு, நடிகர்களுடைய உரிமை, அவர்களுடைய வாழ்வு முறை இதற்கு தான் முன்னுரிமை. அரசியல் குறுக்கீடு இருந்திருந்தால் தலைவர் என்ற முறையில் முதல் குறுக்கீடு எனக்கு தான் வந்திருக்க வேண்டும். என்னிடம் யாரும் அப்படி பேசவில்லை.,” என்றார்.