‘மெரினா’ – மீண்டும் பிரச்சனை…

      ‘மெரினா’ படத்தை பிறமொழிகளில் வெளியிடத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இயக்குநர் பாண்யடிராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இது பற்றி ‘ மெரினா ‘ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பாலமுருகன் கூறியதாவது.

‘நானும் இயக்குநர் பாண்டியராஜும் பத்தாண்டுக்கும் மேல் பழக்கமுள்ள நண்பர்கள். ‘பசங்க’ படத்துக்கு பிறகு வந்த ‘வம்சம்’ சரிவரப் போகாததால் பட வாய்ப்பில்லாமல் இருந்தார். ஊரிலிருந்து என்னை அழைத்து நாம் படம் செய்யலாம் என்றும் என்னைத் தயாரிப்பாளர் ஆக்குவதாகவும் கூறினார். அப்படித் தொடங்கப்பட்ட படம்தான் ‘மெரினா’. எங்களுக்குள் நல்ல நட்பு இருந்ததால் அந்த நட்பின் மீது நம்பிக்கை வைத்து எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் படத்தை தொடங்கினோம். படப்பிடிப்பு தொடங்கியதும் எல்லா செலவுகளையும் நான்தான் செய்தேன்.

தினசரி படப்பிடிப்பு வருவது முதல் எல்லாவற்றுக்கும் நான் பணம் கொடுப்பது வரை எல்லாமே படப்பிடிப்புக் குழுவினருக்கும் நடித்த நடிகர்களுக்கும் தெரியும். நான்தான் தயாரிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். பணத்தை மட்டுமல்ல படப்பிடிப்புக்கு என் காரை கூட கொடுத்திருந்தேன். இப்படி நன் 50 லட்ச ரூபாய் செலவு செய்தேன். அதற்கான பில்கள்,வவுச்சர்கள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன. கணக்கும் உள்ளது.

பணத்தேவை முடியும் வரை பாசத்துடன் பழகிய பண்டியராஜ் படப்பிடிப்பு செலவுகள் எல்லாம் செய்து முடித்து படத்தின் பெரும்பகுதி முடிந்ததும் என்னைக் கழற்றி விடப் பார்த்தார். அவர் தான் தயாரிப்பாளர் என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்.

வேறு வழியில்லாமல் நீதி மன்றம் சென்றேன். என் பணத்தில் படமெடுத்துவிட்டு இவர் பெயரில் தயாரிப்பாளர் என்று போட்டு வெளியிடுகிறார் என்று கூறினேன். ஏழாவது சிட்டி சிவில் கோர்ட்டில்தான் நான் வழக்கு தொடர்ந்தேன். இது தொடர்பாக நீதியரசர் சந்திரசேகர் அவர்கள் 31.01.2012ல் எங்களை அழைத்து விசாரித்தார். அப்போது பேசிய போது சமரசம் ஏற்பட்டது. அதன்படி என்னை தயாரிப்பாளர்களில் ஒருவர் என்று போட வேண்டும் என்று படப்பிடிப்பு செலவை எனக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவானது. படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்று பெயர் போடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் படத்தின் வெளிமொழி உரிமை, சாட்லைட் உரிமை தயாரிப்பாளர்களில் ஒருவரான என் அனுமதி இல்லாமல் கொடுக்கப்பட கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும் எனக்கு எந்தவித பலனும் இல்லை. படமும் வெளியானது. பாண்டியாஜ் என்னைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டேன். இப்ரகிம் ராவுத்தர் அப்போது இருந்தார்,. என் பிரச்சனையைச் சொன்னேன். அப்போது வேறு 9 தயாரிப்பாளர்களும் கூட உடன் இருந்தார்கள். ஐம்பது லட்சம் செலவு செய்திருக்கிறேன் என்று கூறினேன். பாண்டியராஜை அழைத்து பேசினார்கள். அவர் அப்போது 80-85 செலவாகி விட்டது . இவர் செலவு செய்தற்கு கணக்கு என்னாயிற்று என்றார். நான் இருக்கிறது என்றேன். தயாரிப்பாளர் சங்கத்தை மதிக்காமல் பிறகு அவர் என் மீது தயாரிப்பாளர் சங்கம் மூலம் மிரட்டுவதாக போலிஸ் கமிஷ்னரிடம் புகார் கொடுத்தார். ‘மெரினா’ படத்தின் மூலம் ஆறுகோடி ரூபாய் லாபம் பார்த்தவர் படத்தில் தனக்கு லாபமே இல்லை நஷ்டம் என்றார்.

மீண்டும் என்னை சமரசத்துக்கு அழைத்த பாண்டியராஜ் ஒரிஜினல் டாக்குமெண்டுகளை கொடுத்தால் சமாதானமாகி விடலாம் என்றார். தான் மாறிவிட்டதாகவும் இனி இதுமாதிரி நமக்குள் வேண்டாம் என்று கூறியதாலும் நம்பி செலவுக் கணக்குகள், டாக்குமெண்ட்களை கொடுத்தேன். வாங்கிய பிறகு மாற்றிப் பேச ஆரம்பித்தார். அதனால் மீண்டும் நீதிமன்றம் சென்றேன். நீதிபதி சின்னசாமி அவர்கள் விசாரித்தார். ஒன்பது லட்சம் பணமாகவும் மீதியை செக்காகவும் கொடுப்பதாகவும் முடிவானது அப்படி அவர் கொடுத்த 15 லட்சத்தை தவிர வேறு ஒருகாசு இன்னும் தரவில்லை.

படப்பிடிப்புக்கு முதலீடு செய்து செலவு செய்த பணமும் வரவில்லை.படத்தின் மூலம் அடைந்த லாபமும் என் பங்கிற்கானது வரவில்லை.

நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஏமாற்றமும் வேதனையும் கொண்டவனாக நான் இருக்கிறேன். இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கு பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்திருக்கிறது ‘ மெரினா’ தெலுங்கில் வெளியாகிறது. என்றும் எஸ்.வி.ஆர்.மீடியா நிறுவனம் தெலுங்கில் வெளியிடுவதாகவும் விளம்பரம் வந்துள்ளது.

தயாரிப்பாளர்களில் ஒருவரான என் அனுமதி பெறாமல் ‘ மெரினா’ வை வேறு மொழிகளில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத் தடை உள்ளது. நீதிமன்ற அவமதிப்பாக படம் விற்கப்பட்டுள்ளது.வெளியிடுவதாக விளம்பரமும் வந்துள்ளது.இது பற்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எஸ்.வி.ஆர். மீடியா நிருவனத்தின் மீதும் கிரிமினல் வழக்கு பாண்டியராஜ் மீதும் தொடர்ந்து இருக்கிறேன்’. என்றார்.

இறுதியாக பாலமுருகன் கூறும்போது’சினிமாவில் பழக்கம்,நட்பு,நம்பிக்கை என்று பண விஷயத்தில் யாரும் நினைத்து முறையான ஒப்பந்தம் எழுத்து மூலம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டாம். அப்படி வைத்தால் என்னைப் போல ஏமாற வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாக சொல்கிறேன். ஏமாற வேண்டாம்’, என்றும் கூறினார்.

Read Previous

மீண்டும் அமலா…

Read Next

சுந்தரபாண்டியன் – விமர்சனம்

Most Popular