சமீபத்தில் வெளி வந்து உலகமெங்கும் மிக தரமான படம் என எல்லோராலும் பாராட்டப்பட்ட ‘ நீதானே என் பொன் வசந்தம் ‘ படம் பெண்களுக்கான படம் என இயக்குனர் கௌதம் கூறினார் .
“ பொதுவாக என் படங்களுக்கு பரவலாக எல்லோருடைய பாராட்டும் கிடைக்கும். என்னுடைய 12 படங்களையும் இரு பாலினரும் ரசித்தாலும் ஆண் ரசிகர்களின் எண்ணிக்கை சற்றே கூடுதலாக இருக்கும். ஆனால் இது வரை ‘ நீதானே என் பொன் வசந்தம் ‘ படம் பார்த்து விட்டு என்னையும் என் குழுவினரையும் பாராட்டுவோர் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர் .
அது இப்படத்தின் கதாநாயகி நித்யாவின் கதாபாத்திரத்தை நான் படைக்கும் போதே வந்த உணர்வுதான் என்றாலும் இந்த ஆதரவு என்னை மிகவும் உற்சாக மூட்டுகிறது .
பொதுவாக காதல் படமென்றால் அது ஆண்களின் கண்ணோட்டத்தை சார்ந்தே இருக்கும் ஆனால் ‘ நீதானே பொன் வசந்தம் ‘ படம் ஆண் -பெண் இருவரின் கண்ணோட்டத்தையும் சார்ந்த படமாக உள்ளதால் இது சாத்தியமானது ” என்று தெரிவித்துள்ளார்.