தீபாவளி நேரத்துல படங்களை மட்டுமா கொண்டாடலாமா என்ன, டிவி சிறப்பு நிகழ்ச்சிகள், வாராந்திர பத்திரிகைகளின் சிறப்பு பேட்டிகள், நாளிதழ்களின் சிறப்பு பேட்டிகள் என அனைத்துமே ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதாகவே அமைவது வழக்கம்.
அப்படி ஒரு பரபரப்பை தற்போது ஏற்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்கது, வார இதழ் ஒன்றுக்கு வடிவேலு அளித்த பேட்டிதான்…அதில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அந்த பேட்டியில் ஏற்கெனவே வேலை பார்த்த இயக்குனர்கள், நடிகர்களிடம் மீண்டும் நடிப்பீர்களா என்ற ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “ படம் பார்க்க வருபவர்களில் பலர் நகைச்சுவைக் காட்சிகளை மட்டுமே பார்ப்பதற்காகவே வருகிறார்கள். வடிவேலு நடிக்கிற காட்சிலாம் முடிஞ்சிடுச்சின்னா மொத்த படத்தையும் பார்க்காம பாதியிலயே எழுந்து போயிடறாங்கன்னு வர்ற ரெஸ்பான்ஸ்தான் நமக்கு மைனஸ், பிளஸ். அதனால பாதிக்கப்பட்ட ஒரு நாலு பேருக்கு நம்ம மேல கோபம் வருமில்லையா. இந்த வடிவேலு இல்லாம படம் பண்ணலாமேன்னு கூட்டம் கூட்டமாக கூட மீட்டிங்லாம் போட்டாங்க. அந்த மீட்டிங்குக்கு நம்மல மட்டும்தான் கூப்பிடலை, நல்லா இருக்கட்டும்ணே…” என யாரையோ அல்லது பலரையோ குறிவைத்துப் பேசியிருக்கிறார்.
வடிவேலுவை சினிமாவில் இருந்து ஒதுக்க சிலர் முயற்சி எடுத்திருப்பது இதன் மூலம் தெரிகிறது. அப்படி வடிவேலுவை சினிமாவில் இருந்து துரத்த அப்படி மீட்டிங் போட்டது இயக்குனர்களா, நடிகர்களா அல்லது அவருடைய போட்டியாளர்களா என்பதுதான் அந்தப் பேட்டியை படித்த பலரின் கேள்வியாக இருக்கிறது.
அப்படி, கூட்டம் கூடி மீட்டிங் போட்டு அவரை வேண்டாமென்று சொல்ல முயற்சித்தவர்கள் யாரா இருக்கும்…யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கப்பா…