விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் வெளியீட்டில் நாளை வெளிவர உள்ள படம் ‘இந்தியா பாகிஸ்தான்’.
‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் காதலிலும், காதலர்கள் இடையேயும் ஏற்படும் பிரச்சனைகளை இதுவரை சொல்லாத விதத்தில் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆனந்த். இவர் ‘யாரடி நீ மோகினி’ படத்தை இயக்கிய ஜவஹர் மித்ரனிடம் உதவியாளராக பணியாற்றியவர். அந்த உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம். இவர் இயக்குனர் ஆனந்தின் தம்பி என்பதுக் குறிப்பிடத்தக்கது.
‘காதலர்களின் மிகப் பெரிய பிரச்சினை காதலர்களும் காதலும் தான் என்பதே இப்படத்தின் மையக் கருத்து. ஒரு பற்பசையில் கூட ஏற்படும் கருத்து பிரிவு கூட காதலில் மாபெரும் பிளவை உண்டாக்கும். எல்லை, நாடுகளுக்கிடையே ஒரு பிரச்சினை என்றால், நீயா நானா என்ற ஈகோ போட்டி காதலர்களுக்கான போர்க்களம் ஆக மாறி விடும்,” என்கிறார் இயக்குனர் ஆனந்த்.
விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளிவரும் படம் இது. கதாநாயகியாக சுஷ்மா அறிமுகம் ஆகிறார். அழகில் மட்டுமல்ல, திறமையிலும் சிறந்தவராக இவர் இருக்கிறாராம்.
“என்னுடைய முந்தைய படங்களான ‘நான்’ ‘சலீம்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதற்கும், அந்த படங்களில் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே பிரபலமானதற்கும் அந்த படங்களின் கதை அமைப்பே மூலக் காரணம்.
‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் கதையும் அந்த வகையை சேர்ந்ததுதான். என்னிடம் கீ போர்டு வாசித்த தீனா தேவராஜ் இந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். உக்கிரமான கோடையில் , சாமரம் வீசும் வசந்தமாக இருக்கும் ‘இந்தியா பாகிஸ்தான்’. காதலர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்,” என்கிறார் விஜய் ஆண்டனி.