‘டாக்சிக்’ படத்தில் கரீனா கபூர் நீக்கப்பட்டு, நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், கரீனா கபூர், கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள படம் ‘டாக்சிக்’. இதன் படப்பிடிப்புக்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இதன் பெரும்பாலான காட்சிகள் கோவாவில் காட்சிப்படுத்த முடிவு செய்திருந்தது படக்குழு.
இதனிடையே, ‘டாக்சிக்’ படக்குழு முடிவு செய்த படப்பிடிப்பு தேதிகள் கரீனா கபூர் தேதிகளுடன் ஒத்துப் போகவில்லை. இதற்காக பலமுறை பணிபுரிந்தும் சரியாக அமையவில்லை என்பதால், இந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் கரீனா கபூர். தற்போது இந்த கதாபாத்திரத்துக்கு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
’டாக்சிக்’ படத்தில் யஷுக்கு சகோதரி கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார் கரீனா கபூர். இதன் கதைப்படி சகோதரி கதாபாத்திரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எழுதியிருந்தார் கீது மோகன்தாஸ். அதில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி விடுவார் என்கிறார்கள். ஏனென்றால், அவர் கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
‘டாக்சிக்’ படக்குழுவினரின் தேதிகளுக்கு தகுந்தாற்போல், தனது மற்ற படத்தின் தேதிகளை மாற்றிவருகிறார் நயன்தாரா.