‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பெரும் வசூல் செய்யும் என எண்ணவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. 200 கோடி ரூபாய் வசூலை கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில், கமல், விக்ரம், சித்தார்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 6-ம் தேதி தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதற்கான ஹைதராபாத்தில் தெலுங்கு வெளியீட்டிற்கான விளம்பர பணிகளை கவனித்து வருகிறார் சிதம்பரம்.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தொடர்பாக சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் “200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்யும் என்று எண்ணவில்லை. பெரும் பணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் யாரும் பணிபுரியவில்லை. நல்ல படம் ஒன்று பண்ண வேண்டும் என விரும்பினோம்.
’ஜான் ஈ மான்’ படத்திற்குப் பிறகு சில கேரள நண்பர்கள் வாழ்வில் நடந்த சம்பவம் குறித்து தெரிந்துக் கொண்டேன். அவர்களுடைய நட்பு என்னை வியக்க வைத்தது. அதற்குப் பின்பு அவர்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் கூறியதே ஒரு படத்திற்கான கதையாக இருந்தது. நிஜ ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவினர் படமாக உருவதற்கு பெரும் சந்தோஷமடைந்தார்கள்” என்று தெரிவித்துள்ளார் சிதம்பரம்.