பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘கும்கி 2’

மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப் பூர்வமான படமான ‘கும்கி’ வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகிறது. அந்தக் கதை, ரசிகர்களின் மனதை வென்றது, மாபெரும் வெற்றியையும் பெற்றது. இன்றும் அது அன்புடன் நினைவு கூறப்படுகிறது. 

அதன் இரண்டாம் பாகத்தையும் பிரபு சாலமன் இயக்க, நாயகனாக அறிமுக நாயகன் மதி நடிக்கிறார்.  

ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது ‘கும்கி 2’. கதாபாத்திரத்துக்குத் தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார் மதி என படக்குழு அவரைப் பாராட்டுகிறது. காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியாகக் காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாயினும், தொடர்ந்து பயிற்சி செய்து யானையுடன் உள்ள தொடர்பை உயிர்ப்பித்துள்ளார். மதி யின் நடிப்பைப் பார்த்து, அவரது ஆர்வமும் முயற்சியும் தெளிவாகத் தெரிகின்றன என இயக்குநர் பிரபு சாலமன் பெருமையாகக் கூறுகிறார்.

இந்த படம், மனிதன்–இயற்கை–யானை இடையேயான பிணைப்பை அழகாகச் சித்தரிக்கும்.

பைசன் ஆடியோ வெற்றியைத் தொடர்ந்து நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, படத்தின் உணர்ச்சிகளை இன்னும் ஆழமாக்கும். யானைகள் இடம் பெறும் காட்சிகள், மூச்சு வாங்கும் அளவிற்கு அடர்த்தியான காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. அது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.

மைனா, கும்கி 1, மான் கராத்தே, தர்மதுரை, பைரவா , தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பணியாற்றிவரும் எம் சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவாகும் கும்கி 2, முதல் பாகம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் வருகிறது.

படத்தில் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Read Previous

நவம்பர் 7ல் வெளியாகும் ‘அதர்ஸ்’

Read Next

ரஜினிகாந்த்தை மனதில் வைத்து எழுதிய கதை ‘ட்யூட்’, இயக்குனர் தகவல்