‘கல்கி 2898 ஏடி’ படத்துக்கு டிக்கெட் விலையை ஏற்றி விற்றுக் கொள்ள ஆந்திரா அரசும் அனுமதி அளித்திருக்கிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தியாவில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
ஜுன் 27-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம் பல்வேறு வசூல் சாதனைகளை வெளியாகும் முன்பே செய்து வருகிறது. இதனிடையே, இந்தப் படத்துக்கு டிக்கெட் விலையினை ஏற்றி விற்றுக் கொள்ள தெலங்கானா அரசு அனுமதி அளித்திருக்கிறது.
தற்போது ஆந்திரா அரசும் அனுமதி அளித்திருக்கிறது. ஒற்றை திரையரங்களின் டிக்கெட் விலையினை 75 ரூபாயும், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளின் டிக்கெட் விலையினை 125 ரூபாயும் அதிகப்படுத்தி விற்றுக் கொள்ளலாம் என்று ஆந்திரா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 14 நாட்களுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதியும் கொடுத்திருக்கிறது.
இந்த அறிவிப்பால் ‘கல்கி 2898 ஏடி’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏற்கனவே முதல் வாரத்துக்கு கடும் டிக்கெட் கெடுபிடி இருப்பதால், இந்த அறிவிப்பின் மூலம் வசூலை அள்ளிவிடலாம் என்ற முனைப்பில் இருக்கிறார்கள்.