‘கோட்’ வெளியீடு குறித்து படக்குழுவினரின் திட்டம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கோட்’. இந்தப் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இன்னும் சென்னை மற்றும் வெளிநாட்டில் சில காட்சிகள் படமாக்க வேண்டியதுள்ளது.
ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் இந்த மாதத்தில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் படத்தின் வெளியீடு எப்போது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
ஏனென்றால், இப்போதைக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது படக்குழு. ஆனால், ‘புஷ்பா 2’ படமும் அதே தேதியில் வெளியாகும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ‘புஷ்பா 2’ வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டாலும், இன்னும் படப்பிடிப்பு முழுமையாக முடிவுபெறவில்லை. இதனால் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானால், அதே தேதியில் ‘கோட்’ படத்தினை வெளியிட வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தை தாண்டி இதர மாநிலங்களில் வசூல் பாதிக்கும் என கருதுகிறது ‘கோட்’ படக்குழு.
இதனால் ‘புஷ்பா 2’ படக்குழுவினரின் திட்டமிடலை முன்வைத்தே, தங்களுடைய படத்தின் வெளியீட்டை முடிவு செய்யவுள்ளனர். அதற்குள் படத்தின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். ‘கோட்’ படத்தின் முதல் பாடலை மே மாதம் வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது.